சோல்: தென்கொரியாவின் தலைநகரான சோல் நகரில் இருக்கும் கிம்போ அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்படும் ஏசியானா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளின் உடல் எடையும் கணக்கிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்தது.
இந்த நடவடிக்கையை இம்மாதம் 22ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமான ஏசியானா ஏர்லைன்ஸ் கூறியது.
இப்பயிற்சியின் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள் சராசரி பயணிகளின் எடையைக் கணக்கிடுவதற்காக மட்டுமே பயன்படுத்தபடும் என அது மேலும் குறிப்பிட்டது.
பயணிகள் தாங்கள் அணிந்திருக்கும் உடையுடனும் கைப்பெட்டியுடனும் எடையைக் கணக்கிடும் இயந்திரத்தில் நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவார்கள். இந்தப் பயிற்சியில் பங்கேற்க பயணிகளுக்கு விருப்பம் இல்லையென்றால் அவர்கள் அதை மறுக்கலாம்.
இந்தத் தரவுகளைப் பயன்படுத்தி விமானங்கள் கூடுதலாக எவ்வளவு எரிபொருள் கொண்டு செல்ல வேண்டும் என்பதை விமான நிறுவனங்கள் கணக்கிட முடியும் என யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறியது.
இதேபோன்ற பயிற்சியை கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதிக்கும் டிசம்பர் 21ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இவ்விமான நிறுவனம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.