தென்கொரியா: வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் அவசரகாலக் கதவைத் திறக்க முயன்ற மாது ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
இச்சம்பவம் நவம்பர் 23ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து தென்கொரியாவின் இன்ச்சியானுக்குச் சென்ற கொரியன் ஏர் விமானத்தில் நடந்தது.
விமானச் சிப்பந்திகள் அந்த 26 வயது மாதை உடனடியாகக் கட்டுப்படுத்தினர். இன்ச்சியான் அனைத்துலக விமான நிலையத்தை அடைந்த பிறகு, காவல் துறையினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டதாகவும் பரிசோதனையில் அவர் ‘மெத்’ போதைப்பொருளை உட்கொண்டது உறுதி செய்யப்பட்டதாகவும் கொரியா ஜூங்அங் டெய்லி எனும் நாளேடு தெரிவித்தது.
இவ்வாண்டு தென்கொரிய விமானத்தில் நடைபெற்ற இத்தகைய மூன்றாவது சம்பவம் இது.
விமானப் பாதுகாப்புச் சட்டத்தை மீறி நடுவானில் விமானத்தின் அவசராகாலக் கதவைத் திறக்க முயல்வோர்க்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.