ஜகார்த்தா: இந்தோனீசிய நிதி அமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திராவதி அந்நாட்டு நிதி அமைச்சராக தொடர்ந்து தன் கடமையைச் செய்கிறார் என அந்நாட்டு நிதி அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
அந்நாட்டில் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக முல்யானி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் பதவி காலம் இவ்வாண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவடைகிறது. தனது அரசியல் செல்வாக்கைத் தக்க வைத்துக்கொள்ளும் வகையில் அவருடைய மூத்த மகனான ஜிப்ரான் ரகபுமிங் ரகாவை துணை அதிபராக நியமித்தார். மேலும், அவருடைய இளைய மகனான கேசங் பங்கரேப்பை இந்தோனீசியா சாலிடாரிட்டி கட்சியின் தலைவர் ஆக்கினார்.
ஜோகோவியின் இந்த நடவடிக்கை அவரது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த அமைச்சர்களில் ஒருவரான ஸ்ரீ முல்யானி இந்திராவதி ஜோகோவியின் இந்த நடவடிக்கைக்கு தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் தனது நிதி அமைச்சர் பதவியிலிருந்து விலகுவார் என ஊகிக்கப்பட்டது.
“நல்லாட்சி மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க தொழில்ரீதியாகவும் பொறுப்புடனும் அரசு நிதிகளை நிர்வகிப்பதில் தனது கடமைகளை ஸ்ரீ முல்யானி இந்திராவதி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்,” என ஊடகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அந்நாட்டு நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.