இவ்வட்டார நாடுகளுக்கு சூறாவளிப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று இந்தோனீசியாவில் அந்நாட்டு வெளி யுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான வலுவான உறவை மறுவுறுதிப்படுத்துவதே அமைச்சர் விவியன் பயணத்தின் நோக்கமாகும்.
நேற்று மாலை 5.40 மணியளவில் இரு அமைச்சர்களும் சந்தித்துப் பேசினர். இதையடுத்து கூட்டு மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் அவர்கள் பேசினர்.
திரு ரெட்னோ தனக்கு அனுப்பியிருந்த இந்தோனீசிய பாரம்பரிய தின்பண்டத்தின் படத்தை அமைச்சர் விவியின் நேற்று ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்டிருந்தார். ஹோட்டலில் தங்கியிருந்த சிங்கப்பூர் பேராளர்களை ஆச்சரியமான முறையில் வரவேற்கும் விதத்தில் தின்பண்டங்களை திரு ரெட்னோ அனுப்பியிருந்தார்.
இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவையும் பழைய நண்பர்களையும் சந்திக்கப் போவதாக பதிவில் அவர் கூறியிருந்தார்.
நேரடியாக அவர்களைச் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன் என்று கண் மருத்துவருமான டாக்டர் விவியன் குறிப்பிட்டிருந்தார்.
வெளியுறவு அமைச்சு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கொள்ளைநோயிலிருந்து மீண்டு வரும் சூழலில் இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு நெருக்கமான உறவைப் பலப்படுத்துவதே பயணத்தின் நோக்கம் என்று தெரிவித்தது.
ஜகார்த்தாவில் கடல்துறை விவகாரம் மற்றும் முதலீடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுட் பண்ட்ஜய்டான், பொருளியல் விவகார ஒருங்கிணைப்பு அமைச்சர் ஏர்லங்கா ஹர்டார்டோ, நிதி அமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திராவதி, எண்டர்பிரைஸ் அமைச்சர் எரிக் தோஹிர், பயணத்துறை மற்றும் புத்தாக்க பொருளியல் அமைச்சர் சான்டியகா உனோ ஆகியோரை திரு விவியன் சந்திப்பதாக சிங்கப்பூர் அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
ஜகார்த்தா ஆளுநர் ஏனிஸ் பஸ்வெடானையும் மற்ற முக்கிய இந்தோனீசிய பிரமுகர்களையும் அவர் சந்திக்கவிருக்கிறார்.
ஆட்சிக் கவிழ்ப்பு நடந்துள்ள மியன்மார் விவகாரம் குறித்து விவாதிக்க ஆசியான் தலைவர்கள் உயர்மட்ட கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று இந்தோனீசிய அதிபர் யோசனை கூறியுள்ள வேளையில் டாக்டர் பாலகிருஷ்ணன் அங்கு சென்றுள்ளார். இந்தோனீசிய பயணத்துக்கு முன்பு ஆசியானின் தற்போதைய தலைவரான புருணை மற்றும் மலேசியாவுக்கு அமைச்சர் சென்றிருந்தார்.