அலோர் ஸ்டார்: மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில், கூருன் அருகே வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) நிகழ்ந்த நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ராணுவ வீரர்கள் மூவர் உயிரிழந்தனர்.
அந்த நான்கு வாகனங்களில் மூன்று ராணுவத்தினுடையவை எனத் தெரிவிக்கப்பட்டது. 30 முதல் 40 வயதிற்குட்பட்ட அம்மூன்று வீரர்களும் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மாண்டுபோனது உறுதிப்படுத்தப்பட்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
விபத்து குறித்து காலை 10.22 மணிக்கு குவார் செம்படாக் தீயணைப்பு, மீட்பு நிலையத்திற்குத் தகவல் கிடைத்ததாகக் கூறப்பட்டது.
விபத்தில் மூன்று ராணுவ வாகனங்களும் ஒரு லாரியும் சம்பந்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
“மூன்று ராணுவ வாகனங்களும் வரிசையாகச் சென்றபோது, அவற்றில் ஒன்று பழுதடைந்ததால் அம்மூன்று வாகனங்களும் நிறுத்தப்பட்டன. அவற்றில் இருந்த ராணுவ வீரர்கள் கீழே இறங்கியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று, சாலையில் வழுக்கிச் சென்று அவர்கள்மீது மோதியது,” என்று தீயணைப்பு நிலைய உயரதிகாரி முகம்மது ஃபௌசி ரசாலி விளக்கினார்.
இவ்விபத்தில் 31 வயது லாரி ஓட்டுநரும் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உயிரிழந்த வீரர்களின் உடல்கள் உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.