தீவு விரைவுச்சாலையில் ஜனவரி 22ஆம் தேதி மாலை ஏற்பட்ட விபத்தில் டிப்பர் லாரியுடன் மற்றொரு லாரி மோதியது.
அப்போது லாரி இருக்கையில் சிக்கிக்கொண்ட 34 வயது ஓட்டுநரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் மீட்புக் கருவிகளைக் கொண்டு விடுவிக்க வேண்டியிருந்தது.
ஜூரோங் வெஸ்ட் அவென்யு 2 வழியாக வெளியேறுவதற்கு முன்பாக துவாசை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் விபத்து நிகழ்ந்திருப்பதாக அதிகாரிகளுக்கு இரவு 7.30 மணிக்குத் தகவல் கிடைத்தது.
விபத்தில் லாரியின் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்திருந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இதனால், குறைந்தது சாலையின் இரண்டு தடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மீட்கப்பட்ட லாரி ஓட்டுநர் சுயநினைவுடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.