சிட்னி: காஸாவில் மனிதாபிமான போர்நிறுத்தம் மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் மன்றம் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்துக்கு ஆஸ்திரேலியா ஆதரவு வழங்கி உள்ளது. இதனை அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் புதன்கிழமை தெரிவித்தார்.
தீர்மானத்தை அமெரிக்கா எதிர்க்கும் நிலையில், அதன் நட்பு நாடான ஆஸ்திரேலியா ஆதரித்துள்ளது அரிதான சம்பவமாகப் பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் போராளிக் குழுவுக்கும் இடையில் இரண்டு மாதமாக நீடிக்கும் போரால் காஸாவில் மனிதாபிமானத்திற்கு எதிரான நெருக்கடி அதிகரித்து உள்ளதாக ஐநா அதிகாரிகள் எச்சரிக்கையூட்டி வருகின்றனர்.
எனவே, அந்த நெருக்கடிக்குத் தீர்வாக போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி 193 உறுப்பு நாடுகள் கொண்ட ஐநா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அந்தத் தீர்மானத்தை ஆதரித்து 153 நாடுகள் வாக்களித்து உள்ளன. 23 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட 10 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தன.
போர்நிறுத்தம் மூலம் ஹமாஸ் குழு மட்டுமே பலனடையும் என்பது அந்த நாடுகளின் கருத்து.
தீர்மானத்துக்கு ஆதரவாக நின்ற 153 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று என்பது தற்போது தெரிய வந்து உள்ளது.
அது குறித்து விளக்கிய வெளியுறவு அமைச்சர் திருவாட்டி வோங், “இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமைக்கு ஆஸ்ரேலியா தொடர்ந்து ஆதரவுக் குரல் எழுப்பி வருகிறது.
“அதேநேரம், அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தை இஸ்ரேல் மதித்து நடக்க வேண்டும் என ஆஸ்திரேலியா தெரிவித்து உள்ளது.
“மேலும், குடிமக்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட குடிமக்களுக்கான கட்டமைப்பு போன்றவை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஆஸ்திரேலியா வலியுறுத்தி வருகிறது,” என்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுடன் நியூசிலாந்து, கனடா ஆகிய நாடுகளும் இணைந்து செவ்வாய்க்கிழமை கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. ஐநா சண்டை நிறுத்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அவை அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளன.