தாமும் தமது மனைவியும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதாக போலிச் சான்றிதழ் தயாரிக்க மருத்துவர் ஒருவருடன் இணைந்து மோசடி செய்த குற்றத்திற்காக ஆஸ்திரேலிய ஆடவர் ஒருவருக்கு நேற்று சிங்கப்பூரில் 16 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
டேவிட் கிறிஸ்டஃபர் நியூட்டன், 44, எனப்படும் அவருக்கு 2021 டிசம்பர் மாதவாக்கில் ஆஸ்திரேலியாவில் உள்ள காமன்வெல்த் பேங்க் ஆஃப் ஆஸ்திரேலியா என்னும் வங்கியில் வேலை கிடைத்தது. ஆனால், அந்த வேலைக்கு அவர் ஆஸ்திரேலியா செல்ல வேண்டும்.
கொவிட்-19 தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் இல்லாத அந்த ஆடவர், சிங்கப்பூரில் தடுப்பூசிக்கு எதிரான இயக்கம் ஒன்றின் மூலம் தாமஸ் சுவா செங் சூன் என்னும் மருந்தக உதவியாளர் ஒருவருடன் தொடர்புகொண்டார்.
தடுப்பூசி போட்டதாக சான்றிதழ் தயாரிக்க ஜிப்சன் குவா எனும் மருத்துவருடன் அந்த இருவரும் இணைந்து மோசடித் திட்டம் ஒன்றைத் தீட்டினார்.
அதன்படி குவாவின் மருந்தகங்களில் நியூட்டனுக்கும் அவரது மனைவி வோங்லங்கா அப்னியா, 32, என்பவருக்கும் 2021 டிசம்பர் 29ஆம் தேதி முதல் போலி தடுப்பூசியும் 2022 ஜனவரி 15ஆம் தேதி இரண்டாவது போலி தடுப்பூசியும் போடப்பட்டன. அவ்விருவருக்கும் ‘சினோஃபார்ம்’ தடுப்பூசி என்ற பெயரில் ஊசி வழியாக சாதாரண உப்பு கரைசல் செலுத்தப்பட்டது.
ஆனால், இந்த மோசடி பற்றி நியூட்டனின் மனைவிக்கு எதுவும் தெரியவில்லை. உண்மையாகவே தடுப்பூசி போடப்படுவதாக அவர் கருதினார்.
போலி தடுப்பூசிச் சான்றிதழுக்காக மருத்துவருக்கு $6,000 பணத்தை அந்த ஆடவர் வழங்கியது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவர் குவாவும், 35, அவரது உதவியாளர் சுவாவும், 41, கைது செய்யப்பட்டனர்.
நியூட்டனுக்கு வழங்கியது போல மேலும் 16 பேருக்கு இந்த மருத்துவர் போலி தடுப்பூசி சான்றிதழ் வழங்கியது தெரிய வந்தது.