அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இருந்து மின்னணுவியல் ஏற்றுமதிகளுக்கான தேவை குறைந்துள்ள நிலையில், சிங்கப்பூரின் வளர்ச்சி வாய்ப்புகள் மேலும் நிலையற்றதாக இருப்பதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.
பெரிய பொருளியல்கள் இடையே சீனா விதிவிலக்காக விளங்கும். அங்கு கொவிட்-19 கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்த பிறகு பொருளியல் வளர்ச்சி மீட்சியடைய இருப்பதாக ஆணையம் நேற்று வெளியிட்ட விரிநிலைப் பொருளியல் மறுஆய்வு அறிக்கை தெரிவித்தது.
எனினும், சுற்றுப்பயணத்துறைக்கு அப்பாற்பட்டு, சீனா அதன் எல்லைகளை மீண்டும் திறந்ததன் காரணமாக சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் ஏற்றுமதிகள் மேம்பாடு சற்று மந்தமாக இருக்கும் என முன்னுரைக்கப்படுவதாக ஆணையம் குறிப்பிட்டது.
வட்டி விகிதங்களின் அதிகரிப்பாலும் அமெரிக்க, ஐரோப்பிய வங்கித் துறைகளில் நிலவும் கொந்தளிப்பாலும் சிங்கப்பூர் நிதித் துறைக்கான கண்ணோட்டம் வலுவிழந்து காணப்படுவதாக ஆணையம் கூறியது.
அமெரிக்க-சீன வர்த்தக மோதல்களுக்கு மத்தியில் விநியோகத் தொடர்கள் மறுகட்டமைக்கப்படுவது, உலகளாவிய தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கும் சிங்கப்பூரின் மின்னணுவியல் துறைக்கும் அச்சுறுத்தல் விடுப்பதாக ஆணையம் எச்சரித்தது.
சிங்கப்பூர் மின்னணுவியல் துறை, உற்பத்தித் துறையில் 42 விழுக்காடும் பணவீக்கம் சரிசெய்யப்படுவதற்கு முந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 விழுக்காடும் பங்கு வகிக்கிறது.
பொருளியல் நடவடிக்கை வலுவிழந்தால் உலகம் முழுவதும் பணவீக்கத்தின் சரிவு வேகமடையும். ஆனாலும், பெரும்பாலான மத்திய வங்கிகள் விரும்புவதைவிட விலைவாசி வேகமாக உயர்கிறது. இதனால் வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்று ஆணையம் விளக்கியது.
உள்நாட்டு ஊழியர் சந்தையில் இறுக்கம் குறைந்து சம்பள ஏற்றம் மிதமடைவதால், பணவீக்க அழுத்தம் வலுவிழக்கும் என்று ஆணையம் நம்புகிறது.
ஆண்டிறுதிக்குள் மூலாதாரப் பணவீக்கம் 2.5 விழுக்காடு வரை குறையும் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது. இதன்மூலம், ஆண்டு சராசரியாக அது 3.5-4.5 விழுக்காட்டிற்கு இடைப்பட்டதாக இருக்கும்.
இவ்வாண்டு சிங்கப்பூர் பொருளியல் 0.5 விழுக்காட்டிற்கும் 2.5 விழுக்காட்டிற்கும் இடைப்பட்ட நிலையில் வளர்ச்சியடையும் என்ற தனது முன்னுரைப்பில் ஆணையம் மாற்றம் செய்யவில்லை. எனினும், இடர்கள் குறித்து அது எச்சரித்தது.
“உலகளாவிய மின்னணுவியல் துறையில் ஏற்பட்டுள்ள பரவலான வீழ்ச்சி, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வங்கித் துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி போன்றவற்றால் சிங்கப்பூரின் வளர்ச்சி வாய்ப்புகள் குறைந்துள்ளன,” என்று ஆணையம் விவரித்தது.
உலகளவில் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய உற்பத்தி, வர்த்தக மெதுவடைவு, இவ்வாண்டு தொடக்கத்தில் மேலும் மோசமடைந்தது. அதன் வர்த்தகப் பங்காளித்துவ நாடுகளுக்கான பொருளியல் வளர்ச்சி பெரும்பாலும் இவ்வாண்டு குறைவாக இருக்கக்கூடும்.
உலகளவில் நாணயக் கொள்கை கடுமையாக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக, வரும் காலாண்டுகளில் உலகம் முழுவதும் பொருளியல் நடவடிக்கை மெதுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆணையம் குறிப்பிட்டது.