ஹவ்காங்கில் ஈரடுக்குப் பேருந்தும் காரும் நேற்று மோதிக்கொண்ட விபத்தில் காயமுற்ற எட்டுப் பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அவர்கள் 33வயதுக்கும் 85 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
ஹவ்காங் அவென்யூ 4- புவாங்கோக் கிரீன் சந்திப்பில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து காலை 10.35 மணிவாக்கில் தனக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.
விபத்தில் சம்பந்தப்பட்டவை ஒரு வெள்ளை நிற காரும் பேருந்து எண் சேவை 43ம் என்று சீன நாளிதழான சாவ்பாவ் குறிப்பிட்டது.
பேருந்தின் முன்பகுதியும் காரின் வலதுப்புறமும் சேதம் அடைந்தன.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த கோ-அஹெட் நிறுவனப் பேச்சாளர், “போக்குவரத்து விளக்கு பச்சை நிறத்தில் ஒளிர்ந்துகொண்டிருந்தபோது சாலைச் சந்திப்பில் பேருந்து நேராகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது வலதுப்புறம் திரும்பிய தனியார் வாகனத்துடன் மோதுவதை அப்பேருந்தால் தவிர்க்க முடியவில்லை,” என்றார்.
“எங்களது முழு உதவியையும் வழங்க, பாதிக்கப்பட்ட பயணிகளுடன் நாங்கள் தொடர்பில் இருந்து வருகிறோம். அதிகாரிகளின் விசாரணைக்கு நாங்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பைநல்குவோம்,” என்றும் அவர் மேலும் கூறினார்.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது அந்த எட்டுப் பேரும் சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது.
அவர்களில் இருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் அறுவர் செங்காங் பொது மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அந்தப் பேருந்தின் கீழ் அடுக்கில் இருந்த முதியவர் ஒருவர் உள்ளிட்ட பயணிகள் சற்று காயம் அடைந்ததைத் தாம் கண்டதாக, அதன் மேல் அடுக்கில் இருந்த பயணி ஒருவர் சாவ்பாவ் நாளிதழிடம் கூறினார்.
விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.