கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் நடுவே காட்சி அளிக்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட ஐந்துமாத காலத்துக்கு சுற்றுப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடலின் உப்புக் காற்றிலிருந்து திருவள்ளுவர் சிலையைப் பாதுகாக்கும் வகையில், ரூ.1 கோடி செலவில் அதன்மீது ரசாயனக் கலவை பூசும் பணியினைத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று தொடங்கிவைத்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலைமீது ரசாயனக் கலவை பூசப்பட்டு வருகிறது. இறுதியாக கடந்த 2017ஆம் ஆண்டில் இது போல் ரசாயனக் கலவை பூசப் பட்டது.
இந்நிலையில், சிலிக்கான் எனப்படும் ரசாயனக் கலவை பூசும் பணி தொடங்க உள்ளது.
சிலையில் உள்ள வெடிப்புகளில் சுண்ணாம்புக் கலவை பூசப்பட்டு, காகிதக் கூழால் சிலையில் படிந்துள்ள உப்புக் கரைசல் நீக்கப்படும்.
அதன்பின்னர் ஜெர்மனி நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட சிலிக்கான் எனப்படும் ரசாயனக் கலவை பூசப்பட உள்ளது.
இப்போது தொடங்கி உள்ள இந்தப் பணிகள் வரும் நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று நிறைவுறும் என்றும் இதன் காரணமாக ஐந்து மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையைக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.