சென்னை: கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்றதாகக் கூறப்படும் 12 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து 211 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றிபெற்றது.
இந்த நிலையில் சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்றவர்களுக்கு எதிராக திருவல்லிக்கேணி காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இதில் 12 பேர் கைது செய்யப்பட்டு, 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களிடமிருந்து 56 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.