மும்பை: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க பந்தடிப்பாளர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
குறிப்பாக அந்த அணியின் ஹென்ரிக் கிளாசன் ஆட்டத்தின் கடைசி கட்டங்களில் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்துவிடுகிறார்.
சனிக்கிழமை மும்பையில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் கிளாசன் விஸ்வரூபம் எடுத்தார்.
தமது அணியை 300 ஓட்டங்களுக்கு எடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிளாசன் 67 பந்துகளில் 109 ஓட்டங்கள் எடுத்து தென்னாப்பிரிக்கா அணியை 399 ஓட்டங்கள் எடுக்க உதவினார்.
இமாலய இலக்கை விரட்டிய இங்கிலாந்து 170 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அது 229 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்று மோசமான தோல்வியைப் பதிவு செய்தது.