சென்னை: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 11வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பங்ளாதேஷ் அணியுடன் மோதுகிறது.
ஆட்டம் சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் சிங்கப்பூர் நேரப்படி மாலை 4:30 மணிக்கு தொடங்கும்.
நியூசிலாந்து அணி தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றது.
குறிப்பாக அவ்வணியின் பந்தடிப்பு பலமாக உள்ளதால் சென்னையில் நடக்கும் ஆட்டத்திலும் அதன் ஆதிக்கம் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் நியூசிலாந்து பந்தடிப்பாளர்களுக்கு சற்று சவாலான ஆட்டமாக இது அமையலாம் என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
கால் காயத்திலிருந்து மீண்டுள்ள கேன் வில்லியம்சன் இந்த ஆட்டத்தில் விளையாடக்கூடும்.
அவர் மீண்டும் நியூசிலாந்து அணியை வழிநடத்துவார் என்பதால் அது அந்த அணிக்கு கூடுதல் பலத்தைச் சேர்க்கும்.
பங்ளாதேஷ் அணி தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களில் ஒரு வெற்றியும் ஒரு தோல்வியும் பெற்றுள்ளது.
இரண்டாவது ஆட்டத்தில் பங்ளாதேஷ் அணி இங்கிலாந்திடம் மோசமாகத் தோற்றது.