புதுடெல்லி: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை மாலை டெல்லி விளையாட்டரங்கில் இந்திய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.
அதில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த ஆட்டத்தில் இந்தியாவின் விராத் கோஹ்லிக்கும் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக்கிற்கும் இடையே அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
2023 ஐபிஎல் தொடரின் போது இரு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது பெரும் சர்ச்சையாக மாறியது.
அதன் பின்னர் நவீன் விளையாடும் ஆட்டங்களில் இந்திய ரசிகர்கள் “கோஹ்லி, கோஹ்லி” என கூச்சலிட்டு வந்தனர்.
இந்நிலையில் டெல்லி விளையாட்டரங்கிலும் ரசிகர்கள் கூச்சலிட்டனர்.
அப்போது கோஹ்லி ரசிகர்களை பார்த்து கூச்சலிட வேண்டாம் என்று கையசைத்தார்.
இதையடுத்து நவீன் தாமாக சென்று விராத் கோஹ்லியிடம் கை கொடுத்தார். அதை சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்ட கோஹ்லியும் அவருடைய தோளில் தட்டிக் கொடுத்த தருணம் மொத்த பகையையும் நட்பாக மாற்றும் வகையில் அமைந்தது.
இச்சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இரு வீரர்களையும் ரசிகர்கள் வாழ்த்தியும் உள்ளனர்.