சென்னை: ஆசியக் கிண்ணத்தில் வெற்றி, அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் வெற்றி என வெற்றிப் பின்னணியுடன் உலகக் கிணணப் பயணத்தைத் தொடங்குகிறது இந்திய அணி.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுகிறது.
பந்தடிப்பு, பந்துவீச்சு, களக்காப்பு என அனைத்து பிரிவுகளிலும் இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு ஈடுகொடுக்கும் வகையில் இருப்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேப்பாக்கம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளமாகத் திகழ்வதால் இந்திய அணி தமது மூன்று முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் சிங்குடன் களமிறங்கக்கூடும்.
பந்தடிப்பு பிரிவில் ஷூப்மன் கில் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் அணித்தலைவர் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் இருப்பதால் பலம்வாய்ந்த பந்தடிப்பு பிரிவாக இந்தியா திகழ்கிறது.
பந்துவீச்சில் முகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா நம்பிக்கைத் தருகின்றனர்.
மறுமுனையில் முதல் ஆட்டத்தில் இருந்தே வெற்றியைப்பெற வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டன.
குறிப்பாக டேவிட் வார்னர், மிட்சல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் சுழற் பந்து வீச்சுக்கு எதிராக தனி பயிற்சி மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக்கிண்ணத்தில் இந்தியா கோப்பையை வென்றது. அதனால் இம்முறை இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பும் உள்ளது.
ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு இது கடைசி உலகக்கிண்ணத் தொடராக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அதனால் அவர்கள் உலகக்கிண்ணத்தை வெல்ல முயற்சிப்பார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.
சனிக்கிழமை மாலை சென்னையில் மழை பெய்தது.
ஞாயிற்றுக்கிழமையும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கை கூறுகிறது.
உலகக்கிண்ணப் போட்டிகளுக்காக சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கிலும் கடுமையான பாதுகாப்பு பணிகள் இடம்பெற்றுள்ளன.
ஆட்டத்திற்கான அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டதால் விளையாட்டரங்கில் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.