ஹாங்ஜோ: ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியா இதற்கு முன்பு அதிகம் சோபித்ததில்லை.
அந்நாட்டின் மக்கள்தொகையைக் கருத்தில்கொள்ளும்போது இது மிகவும் பொருந்தும். இருந்தாலும் ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் கடந்தமுறை நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்திய அணி நன்கு தேர்ச்சி பெற்றது.
இவ்வாண்டின் ஆசிய விளையாட்டுகளில் இதுவரை இல்லாத அளவில் ஆக அதிகப் பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா. ஆசிய விளையாட்டுகளில் முன்னதாக அதிகபட்சம் 70 பதக்கங்களை வென்ற இந்தியா, புதன்கிழமையன்றே அதை விஞ்சிவிட்டது.
வியாழக்கிழமை பிற்பகல் நிலவரப்படி இந்தியா குறைந்தது 81 பதக்கங்களை வென்றுள்ளது, பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
உலகளவில் ஊடகங்கள் இந்திய வீரர்களைப் பெரிதும் பாராட்டி வருகின்றன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வீரர்களுக்குத் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை பிற்பகல் நிலவரப்படி ஆசிய விளையாட்டுகள் பதக்கப் பட்டியலில் சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகியவை மட்டும்தான் இந்தியாவைவிட சிறப்பாகச் செய்திருக்கின்றன. ஆசிய கண்டத்தைப் பொறுத்தவரை இந்த மூன்று நாடுகள்தான் விளையாட்டுகளில் ஆகச் சிறப்பாகச் செய்பவை. அவற்றுக்கு அடுத்த நிலையில் இருப்பது இந்தியாவுக்கு மிகுந்த பெருமை தரும் ஒன்று.
45 நாடுகளே ஆசிய விளையாட்டுகளில் போட்டியிடுகின்றன. அதனால் ஒலிம்பிக் விளையாட்டுகளுடன் ஒப்பிடும்போது ஆசிய விளையாட்டுகளில் சிறப்புத் தேர்ச்சி பெறுவது ஓரளவு சுலபம் என்று சொல்லலாம்.
இருந்தாலும், சென்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியா ஏழு பதக்கங்களை வென்றது. அதற்கு முன்பு ஒலிம்பிக் விளையாட்டுகளில் அது இத்தனை பதக்கங்களை வென்றதில்லை.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் விளையாட்டுகளுக்குக் கூடுதல் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அது அந்நாட்டில் விளையாட்டுத் துறை மேம்படவும் விளையாட்டு வீரர்கள் சிறப்பாகச் செய்யவும் வழிவகுத்துள்ளதாக இந்திய அணியின் அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
“விளையாட்டுத் துறையில் இந்தியா சக்திவாய்ந்த நாடாக உருவெடுக்கவேண்டும் என்று இந்தியப் பிரதமர் விரும்புவதே இதற்குக் காரணம். அதனால் வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு அரசாங்கம் பயிற்சிகளையும் அனுகூலங்களையும் வழங்கி வருகிறது,” என்றார் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும் முன்னாள் இந்தியத் திடல்தட வீராங்கனையுமான பி. டி. உஷா.
இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளின் திடல்தடப் போட்டிகளில் இந்தியா 29 பதக்கங்களை வென்றது. இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுகளின் திடல்தடப் போட்டிகளில் இந்தியா 20 பதக்கங்களை மட்டுமே வென்றது.
ஆண்கள் ஈட்டி எறிதலில் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் இரண்டையும் இந்தியா வென்றது. தங்கப் பதக்கத்தை வென்றார் ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் முதல் திடல்தடப் பதக்கத்தை வென்றுதந்த நீரஜ் சோப்ரா.
புதன்கிழமை நடைபெற்ற ஆண்கள் 400 மீட்டர் அஞ்சல் போட்டியிலும் இந்தியா தங்கம் வென்றது.