ஹாங்ஜோ: நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி பேராதிக்கம் செலுத்தி, கோல்மழை பொழிந்து எதிரணிகளைத் திணறடித்து வருகிறது.
‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, திங்கட்கிழமை தனது ஐந்தாவது ஆட்டத்தில் பங்ளாதேஷை எதிர்கொண்டது.
ஹர்மன்பிரீத்தும் மந்தீப் சிங்கும் ‘ஹாட்ரிக்’ கோலடிக்க, அவ்வணி 12-0 என்ற கோல் கணக்கில் பங்ளாதேஷ் அணியை வெளுத்தெடுத்தது.
இரு பிரிவுகளில் தலா ஆறு அணிகள் பங்கேற்கும் நிலையில், இந்திய அணி தனது ஐந்து ஆட்டங்களிலும் வாகைசூடியது. இதன்மூலம், 15 புள்ளிகளுடன் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
வரும் 4ஆம் தேதி நடக்கும் அரையிறுதியில் அது தென்கொரியா அல்லது சீனாவை எதிர்த்தாடும். இறுதிப் போட்டி 6ஆம் தேதி நடைபெறும்.
முன்னதாக, உஸ்பெகிஸ்தான் (16-0), சிங்கப்பூர் (16-1), ஜப்பான் (4-2), பாகிஸ்தான் (10-2) என மற்ற அணிகளையும் இந்தியா பந்தாடியிருந்தது.
இதன்மூலம், ஐந்து போட்டிகளிலும் சேர்த்து 58 கோல்களை அடித்துள்ள இந்திய அணி, எதிரணிகளை மொத்தம் ஐந்து கோல்கள் மட்டுமே அடிக்க அனுமதித்தது.
இதனிடையே, மகளிர் பிரிவிலும் இந்திய அணி மூன்று ஆட்டங்களில் ஏழு புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.