ஸூரிக்: லத்தின் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களில் உள்ள ஆறு நாடுகள் 2030ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தவுள்ளன.
உருகுவே, பராகுவே, அர்ஜெண்டினா, ஸ்பெயின், போர்ச்சுகல், மொரோக்கோ ஆகிய நாடுகளில் காற்பந்துத் திருவிழா அரங்கேறவிருக்கிறது. புதன்கிழமை, அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் இதை அறிவித்தது.
மொரோக்கோ, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகியவை இணைந்து 2030 உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்துகின்றன. போட்டியின் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் முதல் மூன்று ஆட்டங்கள் மட்டும் லத்தின் அமெரிக்க நாடுகளான அர்ஜெண்டினா, பராகுவே, உருகுவே ஆகிய நாடுகளில் நடைபெறும்.
1930ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் காற்பந்து உலகக் கிண்ணப் போட்டி உருகுவேயில் நடைபெற்றது. அப்போட்டியின் இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினாவை வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியது உருகுவே.
1978ஆம் போட்டியை அர்ஜெண்டினா ஏற்று நடத்தியது, 1982ல் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. பராகுவே, போர்ச்சுகல், மொரோக்கோ மூன்றும் முதன்முறையாகப் போட்டியை ஏற்றுநடத்தவுள்ளன.