ரியோ டி ஜெனிரோ: பிரேசிலை வீழ்த்திய அர்ஜெண்டினா காற்பந்து அணி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பா அமெரிக்கா கிண்ணத்தைக் கைப்பற்றியது.
தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் கோப்பா அமெரிக்கா காற்பந்துத் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அதிகாலை நடைபெற்றது.
இதில் நடப்பு வெற்றியாளரான பிரேசிலை, நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா எதிர்கொண்டது.
ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணி வீரர் ஏங்கல் டி மரியா கோல் போட, அர்ஜெண்டினா முன்னிலை பெற்றது.
அதைச் சமன் செய்ய பிரேசில் அணி எடுத்த எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை.
நெய்மார் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களின் முயற்சிகளுக்கு அர்ஜெண்டினா வீரர்கள் முட்டுக்கட்டை போட்டனர். ஐந்து தாக்குதல் வீரர்கள் இருந்தும் பிரேசிலால் ஒரு கோல்கூட போட முடியவில்லை.
இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.
அந்த அணி கடைசியாக 1993ஆம் ஆண்டு இக்கிண்ணத்தை வென்றிருந்தது.
அர்ஜெண்டினாவிற்கு மட்டுமல்ல, அதன் நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கும் இது முக்கிய வெற்றியாகும். ஏனெனில் குழுக்களுக்கு இடையிலான போட்டியில் மட்டுமே கிண்ணங்கள் வென்றிருந்த மெஸ்ஸிக்கு அனைத்துலகப் போட்டியில் கிண்ணம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.
ஆனால் நேற்றையை போட்டியில், ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்கள் இருந்தபோது கோல் போட கிடைத்த பொன்னான வாய்ப்பை மெஸ்ஸி தவறவிட்டுவிட்டார்.