ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் சுவர்ப்பந்தில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி வாகை சூடியது.
ஆட்டத்தின் முதல் சுற்றில் தோல்வி அடைந்த இந்திய அணி, அடுத்த இரண்டு சுற்றுகளில் அபாரமாக விளையாடி வெற்றிபெற்றது.
டென்னிசிலும் இந்தியா கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.
இறுதியாட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ருத்துஜா போஸ்லே ஜோடியும், தைப்பேயின் என் சோ லியாங், சுங் ஹோ ஹுவாங்கை வீழ்த்தியது.
ரோகன் போபண்ணா, ருத்துஜா போஸ்லே ஜோடி 2-6, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றது.
துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புக் குழுப் பிரிவில் சரப்ஜோத், திவ்யா வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
குத்துச்சண்டையில் பிரீத்தி, லவ்லினா மற்றும் நரேந்தர் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
தடகளப் பிரிவில் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஸ்ரீசங்கர், ஆல்ட்ரின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
அது 10 தங்கப் பதக்கம் உட்பட 36 பதக்கங்களை வென்றுள்ளது.
சீனாவின் ஹாங்சோவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.
செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கிய போட்டிகள் அக்டோபர் 8ஆம் தேதி நிறைவுபெறும்.