ஹாங்ஜோ: சீனாவில் நடந்துவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளது.
அவ்வணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றது இதுவே முதன்முறை.
மொத்தம் ஒன்பது அணிகள் பங்கேற்ற இந்த டி20 போட்டித் தொடரில், இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதின.
பூவா தலையாவில் வென்ற இந்திய அணித் தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் தமது அணி முதலில் பந்தடிக்கும் என அறிவித்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிரிதி மந்தானாவுடன் களமிறங்கிய ஷஃபாலி வர்மா ஒன்பது ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஆயினும், அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிகெஸ், மந்தானாவுடன் இணைந்து பொறுப்புடன் ஆடினார். இருவரும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 73 ஓட்டங்களைச் சேர்த்தனர். மந்தானா 46 ஓட்டங்களையும் ஜெமிமா 42 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பின்னர் களம்கண்ட அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இறுதியில், இந்திய அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 116 ஓட்டங்களை எடுத்தது.
அதன்பின் பந்தடித்த இலங்கை அணியில் அடுத்தடுத்து இருவரை வெளியேற்றி அதிர்ச்சியளித்தார் இந்தியாவின் 18 வயது வேகப் பந்துவீச்சாளர் டிட்டாஸ் சாது.
இலங்கை அணி இருபது ஓவர்கள் தாக்குப்பிடித்தபோதும் அவ்வணியால் எட்டு விக்கெட் இழப்பிற்கு 97 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், இந்திய அணி 19 ஓட்ட வித்தியாசத்தில் தங்கத்தைத் தனதாக்கிக்கொண்டது.
நான்கு ஓவர்களை வீசிய சாது, ஆறு ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து, மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
முன்னதாக, இப்போட்டியின்மூலம் அனைத்துலக டி20 கிரிக்கெட்டில் நூறு போட்டிகளில் அணியை வழிநடத்திய இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் இந்திய அணித்தலைவர் ஹர்மன்பிரீத். அப்பெருமையைப் பெற்ற முதலாமவர் ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங்.
பங்ளாதேஷுக்கு வெண்கலம்
இதனிடையே, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்ளாதேஷ், பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
முதலில் பந்தடித்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 64 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. எளிய இலக்கை விரட்டிய பங்ளாதேஷ் அணி, பத்துப் பந்துகள் எஞ்சியிருக்க, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.