புதுடெல்லி: உலகக் கிண்ணப் போட்டிகள் நெருங்கியுள்ள நிலையில், புதிய வரலாறு படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
மொகாலியில் வெள்ளிக்கிழமை நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதனால், ஒருநாள் போட்டிகளுக்கான உலகத் தரவரிசையில் பாகிஸ்தானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்தது.
அத்துடன், இப்போது டெஸ்ட், ஒருநாள், டி20 என மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பது இந்தியாதான்.
இதனையடுத்து, கிரிக்கெட் வரலாற்றில் இப்படி மூவகைப் போட்டிகளிலும் முதலிடத்தைக் கைப்பற்றிய இரண்டாவது அணி என்ற அரிதான, அற்புதமான சாதனையையும் அது படைத்தது.
முன்னதாக, கடந்த 2014ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி இப்படி மூவகை கிரிக்கெட்டிலும் முதலிடம் பிடித்தது.
வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் உலகக் கிண்ண ஒருநாள் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், எல்லாமே இந்திய அணிக்குச் சாதகமாக நிகழ்வதுபோல் தோன்றுவது அவ்வணி ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தது.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி எந்த ஒரு கிண்ணத்தையும் வென்றதில்லை.
இந்நிலையில், அண்மையில் இலங்கை, பாகிஸ்தான் நாடுகளில் நடந்த ஆசியக் கிண்ணப் போட்டியில் வாகை சூடி இந்திய அணி வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.