புதுடெல்லி: உலகக் கிண்ணப் போட்டிகளில் தொடர்ந்து நான்கு வெற்றிகளை அறுவடை செய்துள்ளா இந்தியா, நியூசிலாந்து அணிகள் வரும் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நேருக்கு நேர் பொருதவுள்ளன.
இந்நிலையில், அப்போட்டிக்குப் பிறகு இந்திய அணி ஒரு வாரம் கழித்தே (29ஆம் தேதி இங்கிலாந்துடன்) விளையாடவுள்ளதால் இடையில் ஒரு சில நாள்கள் அவர்களுக்கு ஓய்வளிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாண்டு ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 17 வரை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்திய ஆசியக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியது.
அதன்பின் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடர், அதன்பின் உலகக் கிண்ணப் பயிற்சி ஆட்டங்கள், உலகக் கிண்ணப் போட்டிகள் என இந்திய வீரர்கள் பயணம் செய்தபடியே உள்ளனர்.
இதனால், அடுத்த இரு போட்டிகளுக்கு இடையே ஏழு நாள் இடைவெளி இருக்கும் நிலையில், அவர்கள் இரண்டு, மூன்று நாள்களைத் தங்கள் குடும்பத்துடன் செலவழிக்க அனுமதிக்கப்படலாம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் (பிசிசிஐ) தகவல் கூறுவதாகப் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
நியூசிலாந்துப் போட்டிக்குப் பிறகு ஓய்வளிக்கப்படும் அவர்கள் மீண்டும் 26ஆம் தேதி லக்னோ திரும்புவர் எனச் சொல்லப்படுகிறது.
முதல் சுற்றைப் பொறுத்தமட்டில், இந்திய அணி மட்டுமே தனது ஒன்பது ஆட்டங்களையும் ஒன்பது வெவ்வேறு அரங்குகளில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.