மும்பை: சொந்த மண்ணில் நடந்துவரும் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியதையடுத்து, இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
“சென்னையில் இந்தப் பயணத்தைத் தொடங்கியபோது, அரையிறுதிக்குத் தகுதி பெறவேண்டும் என்பதே எங்களது முதல் இலக்காக இருந்தது,” என்று, வியாழக்கிழமை நடந்த போட்டியில் இலங்கை அணியை நசுக்கிய பிறகு ரோகித் கூறினார்.
இந்திய அணி இதுவரை ஆடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
இந்த வெற்றிப் பயணத்திற்கு அணி வீரர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் உள்ளது என்று ரோகித் குறிப்பிட்டார்.
நடுவரின் தீர்ப்பை மறுஆய்வு செய்யும் ‘டிஆர்எஸ்’ குறித்தும் அவர் பேசினார்.
இலங்கைக்கு எதிரான போட்டியின்போது இந்திய அணி இரண்டு முறை ‘டிஆர்எஸ்’ தொழில்நுட்பத்தின் துணையை நாடியது. அவ்விரு முறையும் விக்கெட்காப்பாளர் கே.எல். ராகுல் சரியான முடிவெடுத்தார்.
இதனையடுத்து, ‘டிஆர்எஸ்’ துணையைக் கோருவதா இல்லையா என்பதில் தான் தலையிடுவதில்லை என்று ரோகித் சொன்னார்.
“டிஆர்எஸ் கோருவதா இல்லையா என்பதை விக்கெட் காப்பாளர், பந்துவீச்சாளர்களின் முடிவிற்கு நான் விட்டுவிடுகிறேன். அவர்கள்மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சில நேரங்களில் அவர்கள் நினைப்பது சரியாக இருக்கலாம், சில நேரங்களில் தவறாகவும் போகலாம்,” என்றார் அவர்.