கோல்கத்தா: இம்மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோல்கத்தாவின் ஈடன் கார்டன் விளையாட்டரங்கில் நடக்கவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில், அப்போட்டிக்குக் கள்ளச் சந்தையில் நுழைவுச்சீட்டு விற்கப்படுவதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் புதன்கிழமை காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
அப்புகாரின்பேரில் வழக்கு பதிந்த காவல்துறை, வியாழக்கிழமையன்று நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்திற்கும் நுழைவுச்சீட்டு விற்பனை செய்த இணையத்தளத்திற்கும் அழைப்பாணை அனுப்பியது.
ஆனால், அவ்விரு தரப்புகளைச் சேர்ந்த எவரும் விசாரணைக்கு முன்னிலையாகவில்லை.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் வங்க கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர், அந்த நுழைவுச்சீட்டு விற்பனை இணையத்தளத்துடன் இணைந்து, பொதுமக்களுக்கான நுழைவுச்சீட்டுகளை ஒதுக்கி, கள்ளச்சந்தையில் விற்பதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வங்க கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
போட்டி நடத்துவது மட்டுமே தங்கள் வேலை என்றும் நுழைவுச்சீட்டு விற்பனையை அனைத்துலக கிரிக்கெட் மன்றமும் (ஐசிசி) நுழைவுச்சீட்டு விற்பனை இணையத்தளமும் பார்த்துக்கொள்கின்றன என்றும் அவர் கூறினார்.