சர்க்கிட் சாலையில் உள்ள ஈரச்சந்தை, உணவு அங்காடி நிலையத்தில் இருக்கும் கடை ஒன்றில் 15 வயது பெண் கடந்த ஓராண்டாகத் தங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தப் பெண் யாருடனும் அவ்வளவாகப் பேசுவதில்லை என்றும் வெறும் சைகை மூலம் தொடர்புகொண்டதாகவும் அந்த நிலையத்தில் உள்ள மற்ற கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாது, கடையை விட்டு வெளியேற அப்பெண் அனுமதிக்கப்படாததால் அவர் வாளிகளில் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது.
இரண்டு மீட்டர் அகலம், மூன்று மீட்டர் நீளமுள்ள அந்தக் கடையைச் பெண்ணின் தந்தை வாடகைக்கு எடுத்துள்ளார்.
பெண்ணும் அவரது தந்தையும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் என்று நம்பப்படுகிறது.
கடையின் உரிமையாளர்கள் தங்கள் பெயரை வெளியிட மறுத்துவிட்டனர்.
ஏப்ரல் மாதம் தொடக்கத்தில், தேசிய சுற்றுப்புற வாரியத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அந்தக் கடையில் சோதனை நடத்தியபோது அப்பெண்ணைக் கண்டனர்.
புளோக் 80 சர்க்கிட் சாலையில் உதவி தேவை என்று ஏப்ரல் 4ஆம் தேதி அழைப்பு கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
பெண்ணைக் கொடுமைப்படுத்தியது தொடர்பாக 63 வயது ஆடவர் விசாரணையில் உதவி வருவதாகக் காவல்துறை கூறியது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் எட்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $8,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்த விவகாரம் குறித்து சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் சிறார் பாதுகாப்புச் சேவைப் பிரிவின் கவனத்துக்கு தேசிய சுற்றுப்புற வாரியம் ஏப்ரல் 3ஆம் தேதியன்று கொண்டு சென்றதாக அறியப்படுகிறது.
பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமை தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக மெக்பர்சன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட ஈரச்சந்தை, உணவு அங்காடி நிலையம் அவரது தொகுதியின்கீழ் வருகிறது.
“நான் அந்தச் சந்தைக்கு அடிக்கடி செல்வேன். ஆகக் கடைசியாக சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது சென்றிருந்தேன். சந்தேகப்படும்படி எதுவும் என் கண்களுக்குத் தட்டுப்படவில்லை. அந்தச் பெண்ணுக்கு வெறும் 15 வயதுதான். அவரது நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்து அறிந்துகொள்ள சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சிடம் தொடர்பில் இருக்கிறேன்,” என்றார் திருவாட்டி டின்.