உயிரியல் மிரட்டல்களை எதிர்கொள்ளத் தென்கிழக்காசிய நாடுகளைத் தயார்ப்படுத்தும் நோக்குடன் சிங்கப்பூரை மையமாகக் கொண்ட புதிய ஆய்வுக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்கூடத்துக்கு ‘சுகாதாரப் பாதுகாப்புக்கான ஆசிய மையம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
தென்கிழக்காசிய நாடுகளின் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தவும் ஆய்வுக்கூடம் இலக்கு கொண்டுள்ளது.
தாராளமாக வழங்கப்பட்ட நிதியைக் கொண்டு புதிய ஆய்வுக்கூடம் நிறுவப்பட்டுள்ளது.
ஆய்வுக்கூடத்தை பலதுறைக் குழு வழிநடத்துகிறது.
வழிநடத்தும் குழுவில் பொதுச் சுகாதாரம், உலகளாவிய சுகாதாரச் சட்டம், கொள்கை அமைப்பு போன்ற துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்களும் அங்கம் வகிக்கின்றனர்.
ஆய்வு, பயிற்சி ஆகியவை தொடர்பாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் எஸ். ராஜரத்னம் அனைத்துலகக் கல்விப் பள்ளியுடன் வழிநடத்தும் குழு இணைந்து செயல்படும்.
ஆய்வுக்கூடத்தின் திறப்பு விழா ஏப்ரல் 17ஆம் தேதியன்று ஒன் ஃபேரர் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதாரப் பிரிவுத் துணை தலைமை இயக்குநரான பேராசிரியர் டெரிக் ஹெங் கலந்துகொண்டார்.
“சிங்கப்பூரில் மாறிவரும் பொதுச் சுகாதாரச் சூழலுக்கும் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்த தென்கிழக்காசிய நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் புதிய ஆய்வுக்கூடம் மிகவும் உதவியாக இருக்கும்,” என்றார் அவர்.
கொவிட்-19 நெருக்கடிநிலையை அடுத்து, எதிர்காலத்தில் அதுபோன்ற எளிதில் பரவக்கூடிய கிருமித்தொற்று ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளத் தயாராவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சிங்கப்பூர் தொடங்கிவிட்டதாக பேராசிரியர் ஹெங் தெரிவித்தார்.