கண்மூடித்தனமாக கார் ஓட்டியதாக ஆடவர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர்மீது இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவாகின.
47 வயது வின்செண்ட் சீ கொக் விங், காரைப் பின்னோக்கிச் செலுத்தி பிறகு பெண் ஒருவரை நோக்கி ஓட்டியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன. அந்தப் பெண் பாதசாரியா அல்லது வாகன ஓட்டுநரா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
அதுமட்டுமல்லாது, அதே நாளன்று காரை அவர் மீண்டும் கண்மூடித்தனமாக ஓட்டியதாகக் கூறப்படுகிறது. அதன் விளைவாக அங்கிருந்த மோட்டார் சைக்கிள் மீது அவரது கார் ஏறிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. தமது மோட்டார் சைக்கிள் மீது சீ ஓட்டிய கார் மோதுவதற்கு முன்பு அந்த மோட்டார் சைக்கிளோட்டி அதிலிருந்து குதித்துத் தப்பியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மார்ச் மாதம் 23ஆம் தேதியன்று இரவு 9.30 மணிக்கும் 10.05 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் உட்லண்ட்ஸ் அவென்யூ 12ல் இந்த இரு சம்பவங்கள் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சாலையோரமாக தமது காரை சீ நிறுத்தியதாகவும் பிறகு காரைப் பின்னோக்கிச் செலுத்தியபோது பின்னால் இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாகவும் காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
பிறகு முன்னோக்கி காரை ஓட்டியபோது அந்த மோட்டார் சைக்கிள் மீது அவரது கார் ஏறிச் சென்றதாக அவர் கூறினார்.
இதைக் காட்டும் காணொளிப் பதிவு எஸ்ஜி ரோடு விஜிலான்ட்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
புகார் அளிக்கப்பட்டு மூன்று மணி நேரத்தில் சீ கைது செய்யப்பட்டார்.
அவர் ஏப்ரல் 22ல் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவார்.