ரோச்சோர் வட்டாரத்தில் 91 வயது ஆடவர் ஒருவர், 60 ஆண்டுகளுக்கு மேலாக பழங்களை விற்று வருகிறார்.
சாவ் பாவ் சீன நாளிதழுக்கு அவருடைய 68 வயது மகள் அளித்த பேட்டியில், அன்றாடம் கடையைத் திறக்க சக்கர நாற்காலியில் தம் தந்தையைத் தள்ளிச் செல்வதாகக் கூறினார். பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, தம் தந்தைக்கு கடையில் அவர் உதவி வருகிறார்.
சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பதற்குப் பதிலாக கடையில் நேரம் செலவிட தந்தை ஸாங் வென் டி விரும்புவதாக அந்த மாது குறிப்பிட்டார்.
ஆல்பர்ட் ஸ்திரீட், ஷார்ட் ஸ்திரீட் பகுதியில் காலை 11 மணியளவில் கடையைத் திறக்கும் ஸாங், இரவு 10 மணிக்குதான் மூடுகிறார். மழைக்காலத்தில் மட்டும் அவர் ஓய்வு எடுத்துக்கொள்கிறார்.
இளம் வயதில் அவர் மேலும் அதிக நேரம் வேலை செய்தாராம். வருமானம் ஈட்டும் ஒரேயொருவராக, குடும்பத்துக்கு ஆதரவளிக்கக் கடையை நள்ளிரவு வரை அவர் திறந்து வைத்திருந்தார்.
முதிர்ந்த வயது காரணமாக ஸாங்கிற்கு செவித்திறன் குறைபாடு இருந்தது. மற்றபடி, அவர் நட்பார்ந்தவராகவும் திறன்பெற்றவராகவும் உள்ளார்.
அவரது விடாமுயற்சியைக் கண்டு வாடிக்கையாளர் பலரும் ஆச்சரியப்பட்டுள்ளதாக சாவ் பாவ் குறிப்பிட்டது. ரோச்சோர் வட்டாரத்தில் வசிப்பவர்களே ஸாங்கின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.