புதுக்கோட்டை: மகளுக்கு பொங்கல் சீர் கொடுப்பதற்காக கரும்புடன் மிதிவண்டியில் 17 கிலோ மீட்டர் தூரம் பயணம் சென்ற விவசாயியின் செயல் புதுக்கோட்டை மக்களை வியக்க வைத்துள்ளது.
அம்மாவட்டத்திலுள்ள கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்லத்துரை. 80 வயதான இவருக்கு அமிர்தவள்ளி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
திருமணமான 12 ஆண்டுகளுக்குப் பிறகே இவரது மகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அப்போது முதல் மகளுக்குத் தவறாமல் பொங்கல் சீர் அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் செல்லத்துரை.
இதையடுத்து, தனக்கு 80 வயதானபோதும் மிதிவண்டியில் மகளுக்காக பொங்கல் சீர்வரிசையுடன் புறப்பட்டார் செல்லத்துரை. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது மிதிவண்டியில் தேங்காய், பழம், மஞ்சள்கொத்து, வேட்டி, துண்டு, பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுடன் செல்லத்துரை புறப்பட்டார்.
17 கிலோமீட்டருக்கு அப்பால் வசிக்கும் தனது மகளின் வீட்டிற்கு மிதிவண்டியிலேயே செல்வது என முடிவெடுத்த அவர் பெரிய அளவில் உள்ள மூன்று கரும்புகளை தன் தலையில் வைத்துக்கொண்டு மிதிவண்டிப் பயணத்தை மேற்கொண்டார். சாலையில் அவரைக் கண்டு வியந்த பொதுமக்கள் பலரும் தங்கள் கைப்பேசியில் அவரைப் படம் பிடித்தனர்.
பாரம்பரியத்தை மறக்காத செல்லத்துரைக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.