இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் பிப்ரவரி 16ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், மின்னிலக்கத் துறையை மேம்படுத்தவும் இணையக் குற்றங்களுக்கு எதிரான தற்காப்பை வலுப்படுத்தவும் வரவுசெலவுத் திட்டம் மூலம் உதவி கிடைக்க வேண்டும் என்று உள்ளூர் மின்னிலக்கத் துறை நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
போதுமான திறன் இல்லாததே சிங்கப்பூரில் மின்னிலக்கத் துறை பேரளவில் மேம்படுவதற்கு முக்கியத் தடைக்கல்லாக இருப்பதாகச் சில நிறுவனங்கள் தெரிவித்தன.
‘வெப்3’ தொழில்நுட்பத்துக்குத் தேவையான திறன்களைக் கொண்டிருக்க திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் தேவை என்று அவை தெரிவிக்கின்றன.
புத்தாக்கமிக்க ‘புளோக்செயின்’ தொழில்நுட்பத்தின் மையமாக சிங்கப்பூர் திகழ, வெப்2விலிருந்து வெப்3 தொழில்நுட்பத்துக்கு உள்ளூர் மேம்பாட்டாளர்கள் மாற, இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் உதவ வேண்டும் என்றும் மார்ஜின்எக்ஸ் தளத்தின் டாக்டர் டேனி லிம் தெரிவித்தார்.
‘வெப்2’ என்பது தற்போது கூகல், ஃபேஸ்புக் போன்றவை ஆதிக்கம் செலுத்தும் இணையமாகும்.
சிங்கப்பூரில் துடிப்புமிக்க ‘புளோக்செயின் சமூகம்’ உருவாக ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் போன்ற தளங்கள் மூலம் இத்துறை தொடர்பாகச் சலுகைகள், கல்வித் திட்டங்கள் வழங்குவது பெரிதும் உதவும் என்றார் டாக்டர் லிம்.