டிபிஎஸ் வங்கி, தொழில்நுட்பப் பொறுப்புகளில் 150 பேரை வேலைக்கு எடுக்கவுள்ளது. அந்த வங்கி முன்னெடுக்கும் திட்டம் ஒன்றின் மூலம் வேலைக்குச் சேர விண்ணப்பித்தவர்களின் ஆற்றல் சோதிக்கப்படும்.
'டிபிஎஸ் ஹேக்2ஹயர்' எனும் அத்திட்டம், 14 மேம்பாட்டாளர், பொறியியல் பொறுப்புகளில் பணியிடங்களை நிரப்ப இலக்கு கொண்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு, இயந்திரவியல் கற்றல், 'புளோக்செயின்' தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் பயன்பாட்டை அந்த வங்கி விரிவுப்படுத்தி வருகிறது.
"புதிய பட்டதாரிகளும் அனுபவமிக்க நிபுணர்களும் பணியில் சேர விண்ணப்பிக்கலாம்," "சிங்கப்பூரின் ஆகப் பெரிய வங்கியான டிபிஎஸ் நேற்று கூறியது.
இம்முறை நான்காவது ஆண்டாக 'ஹேக்2ஹயர்' திட்டம் இடம்பெறுகிறது.
கொவிட்-19 நெருக்கடிநிலை சூழல் காரணமாக இத்திட்டம் கடந்த ஆண்டு இடம்பெறவில்லை.
முந்தைய ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 120 பேரை டிபிஎஸ் பணியமர்த்தியது.
பணியில் சேர விரும்புவோர் அடுத்த மாதம் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நிரலிடுதல், தொழில்நுட்ப ஆற்றல் ஆகியவற்றை மதிப்பிடும் இணையச் சவால் ஒன்றில் அவர்கள் பங்கேற்க வேண்டும்.
வங்கியின் கலாசாரத்திற்குப் பொருத்தமானவர்களா என்பதைக் கண்டறிய வெற்றிகரமான விண்ணப்பதாரர்களுக்கு நேர்
முகத் தேர்வு நடத்தப்படும்.
விருப்பமுள்ளவர்கள் https://www.dbs.com/hack2hire/sg/index.html எனும் இணையப்பக்கத்திற்குச் செல்லலாம்.
கடந்த மே மாதத்தில் தொழில்நுட்பப் 'பொறுப்புகளில் டிபிஎஸ் மகளிர்' எனும் மெய்நிகர் வேலைச் சந்தையில் பெண்களுக்காக 140 வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டன.