டிபிஎஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பியுஷ் குப்தாவின் 2023ஆம் ஆண்டு வருமானம் 30 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.
டிபிஎஸ் குழுமத்தின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களின் வருமானமும் குறைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிபிஎஸ் வங்கியின் மின்னிலக்கச் சேவையில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திரு குப்தா, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோரின் ‘வெரியபிள் பே’ எனப்படும் நிர்வாகத்தின் வருமான வளர்ச்சிக்கு அதன் ஊழியர்கள் அல்லது அதிகாரிகளின் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில், குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்கிற முறையில் மற்றவர்களைவிட திரு குப்தாவின் வருமானம் ஆக அதிகமாக 30 விழுக்காடு ($4.14 மில்லியன்) குறைக்கப்பட்டது என்று பிப்ரவரி 7ஆம் தேதியன்று டிபிஎஸ் அதன் நான்காம் காலாண்டு வருமான அறிக்கையில் தெரிவித்தது.
2022ஆம் ஆண்டில் திரு குப்தாவின் வருமானம் $15.4 மில்லியனாக இருந்தது.
2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த அடிப்படையில், டிபிஎஸ் வங்கியின் நிர்வாகக் குழுவின் 2023ஆம் ஆண்டு வருமானம் 21 விழுக்காடு குறைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத லாபத்தை டிபிஎஸ் ஈட்டியபோதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வாழ்க்கைச் செலவினம் அதிகரிப்பைச் சமாளிக்க கீழ்நிலை ஊழியர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு ஒருமுறை போனஸ் வழங்கப்படும் என்று டிபிஎஸ் தெரிவித்தது.
டிபிஎஸ் குழுமத்தின் மொத்த ஊழியரணியில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் கீழ்நிலை ஊழியர்களாவர். இவர்களுக்கு உதவும் வகையில் மொத்தம் $15 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தனது தொழில்நுட்பக் கட்டமைப்பை மேம்படுத்த $80 மில்லியன் ஒதுக்குவதாக பிப்ரவரி 7ஆம் தேதியன்று டிபிஎஸ் குழுமம் உறுதி அளித்துள்ளது.