டிபிஎஸ், சிட்டிபேங்க் மீது சேவையில் ஏற்பட்ட தடை காரணமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் அறிவித்துள்ளது.
சேவை பாதிக்கப்பட்ட பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் நிவர்த்தி செய்யத் தவறியது குறித்து விசாரணை நடத்தும்படியும் அவ்விரு வங்கிகளுக்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேவையான விவரங்களைச் சேகரித்த பிறகு உரிய மேற்பார்வை நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊடகங்களின் விசாரணைக்கு வியாழக்கிழமை ஆணையம் பதிலளித்தது.
டிபிஎஸ், சிட்டிபேங் வாடிக்கையாளர்கள் அண்மைய சேவைத் தடையால் இணையம் வழி மற்றும் கைப்பேசி செயலிகளைப் பயன்படுத்த முடியாமல் திண்டாடினர்.
கடந்த சனிக்கிழமை மதியம் வங்கிகளின் சேவைகள் ஏறக்குறைய முடங்கின.
இந்த நிலையில் அனைத்து வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கான கணினி கட்டமைப்புகள் மற்றும் சேவைகளில் இடையூறுகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
“வங்கிகள் தரவு நிலையங்கள் மற்றும் கட்டமைப்புகளின் செயல்பாடுகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்துவைப்பது அவசியம். அதுமட்டுமல்லாமல் அவை சரியாகச் செயல்படுகிறதா என்பதை அடிக்கடி சோதனையிட வேண்டும். இதன் மூலம் நான்கு மணி நேரத்திற்குள் சேவைகள் முழுமையாகத் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்,” என்று அந்தப் பேச்சாளர் சொன்னார்.
டிபிஎஸ், சிட்டிபேங் ஆகிய இரு வங்கிகளும் அவற்றின் முதன்மை தரவு நிலையங்களில் பிரச்சினை ஏற்பட்டபோது மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதை ஆணையம் ஒப்புக் கொண்டது.
ஆனால் குறிப்பிட்ட அவகாசத்திற்குள் சேவை முழுமையாக மீட்கப்படவில்லை என்பதை அது நினைவூட்டியது.