கடந்த மூன்று ஆண்டுகளில் குடியிருப்பாளர்கள் அளித்த புகார்கள் காரணமாக வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள 27 பொழுதுபோக்கு வசதிகளின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டன அல்லது சம்பந்தப்பட்ட இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
பொழுதுபோக்கு வசதிகளைப் பயன்படுத்துவோர் அதிக அளவில் சத்தம் போடுகின்றனர் என்ற புகார்கள் அளிக்கப்பட்டதால் நகர மன்றங்கள் இந்த நடவடிக்கையில் இறங்கின.
பொழுதுபோக்கு வசதிகளைப் பயன்படுத்தும்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஆலோசனைப் பலகைகள் பொருத்தப்பட்டதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ பிப்ரவரி 5ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
அந்த இடங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு அடித்தள அமைப்புத் தலைவர்கள் அறிவுரை கூறிய பிறகும் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து பொறுப்பற்ற வகையில் நடந்துகொண்டதால் வேறு வழியின்று அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அமைச்சர் லீ கூறினார்.
சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கு வசதிகளின் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அங்குள்ள விளக்குகள் இயக்கப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.
சில பொழுதுபோக்கு வசதிகள் இரவு நேரங்களில் பூட்டிவைக்கப்பட்டன.
பள்ளி மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபட்டு சத்தம் போடுவதாகக் குடியிருப்பாளர்கள் புகார் அளித்ததை அடுத்து, உட்லண்ட்ஸ் ரிங் சாலையில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புக் கட்டடத்தின் தரைத்தளத்தில் செம்பவாங் நகர மன்றம் தற்காலிகமாகத் தடுப்புகள் போட்டது.
பிடோக் நார்த்தில் உள்ள காற்பந்தாட்டத் தளம் ஒன்றைப் பயன்படுத்தியவர்கள் பொறுப்பற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் இரவு நேரங்களில் சத்தம் போட்டதாகவும் புகார்கள் அளிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, அந்தக் காற்பந்தாட்டத் தளம் தற்காலிகமாக மூடப்பட்டது.
பொழுதுபோக்கு வசதிகளில் பொறுப்பற்ற, பிறருக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய செயல்பாடுகள் தொடர்ந்தால் காவல்துறையுடன் தேசிய பூங்காக் கழகம், தேசிய சுற்றுப்புற வாரியம் போன்ற அரசாங்க அமைப்புகளின் உதவியை நகர மன்றங்கள் நாடும் என்று அமைச்சர் லீ கூறினார்.
இதற்கிடையே, குறிப்பிட்ட சில வகை சர்ச்சைகளுக்கு சமரசப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் அணுகுமுறையைக் கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
சமூக சர்ச்சைகள் நிர்வாகக் கட்டமைப்பு மறுஆய்வு செய்யப்படுவதாகவும் அதன் ஒரு பகுதியாக இதுகுறித்து பரிசீலனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.