நாடாளுமன்றம் வரும் திங்கட்கிழமை (பிப்ரவரி 5) கூடும்போது, சிம்ப்ளிகோ, முன்னாள் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் ஊழல் வழக்கு, சிங்கப்பூரில் ஆட்குறைப்பு நடைமுறைகள் போன்ற அம்சங்கள் விவாதிக்கப்படவிருக்கின்றன.
சிம்ப்ளிகோ தொடர்பில் 20க்கு மேற்பட்ட மன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகக் கூறப்பட்டது.
பொதுப் போக்குவரத்தில் சிம்ப்ளிகோ கட்டணமுறையை முழுமையாக நடப்புக்குக் கொண்டுவரும் திட்டம் குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம், ஜனவரி 9ஆம் தேதி அறிவித்தது.
பொதுமக்கள் பலரும் அதுகுறித்துக் கவலை தெரிவித்திருந்தனர். சிம்ப்ளிகோ நடைமுறையின்கீழ், பொதுப் போக்குவரத்துக் கட்டண வாயிலில் எஞ்சியுள்ள தொகையைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை என்பதை அதிகமானோர் சுட்டியிருந்தனர்.
அதையடுத்து ஜனவரி 22ஆம் தேதி, பயணிகள் சிம்ப்ளிகோ நடைமுறைக்கு மாறும்படி வலியுறுத்தப்பட மாட்டார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் அறிவித்தார்.
அந்த நடைமுறையின் பாதுகாப்பு அம்சங்கள் முதல் ஈஸிலிங்க் மற்றும் நெட்ஸ் ஃபிளாஷ்பே அட்டைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி வரை பல்வேறு அம்சங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
போக்குவரத்து முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீது ஜனவரி 18ஆம் தேதி 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவை அனைத்தையும் அவர் நிராகரித்துள்ளார்.
அந்த வழக்கு தொடர்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் கருதுகிறதா, அந்த ஊழல் வழக்கால் வர்த்தகர்களையும் முதலீட்டாளர்களையும் சிங்கப்பூருக்கு ஈர்ப்பது பாதிக்கப்படுமா, திரு ஈஸ்வரனுக்கும் பெருஞ்செல்வந்தர் ஓங்கிற்கும் இடையில் சிங்கப்பூர் எஃப்1 பந்தயம் தொடர்பான உறவுகள் குறித்த முழுமையான விசாரணை போன்ற அம்சங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜனவரி மாதத் தொடக்கத்தில் லஸாடா நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள ஊழியர்களைத் திடீரென்று ஆட்குறைப்பு செய்தது. தொழிற்சங்கங்கள் அதுகுறித்துக் கலந்தாலோசிக்கப்படவில்லை. அவற்றுக்குத் தகவலும் தரப்படவில்லை.
ஆட்குறைப்பு குறித்து நிறுவனம் மனிதவள அமைச்சுக்குத் தகவல் தந்ததா என்பது உள்ளிட்ட கேள்விகளை மன்ற உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர்.