முதிர்ச்சியடைந்த ஊழியர்கள் வேலையில் தொடர்வதையும் அவர்களின் பணிக்காலத்தை விரிவுபடுத்துவதையும் உறுதிசெய்ய, பயிற்சித் திட்டங்களே ஆகச் சிறந்த வழி என்று அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இருப்பினும் நிறுவனங்கள் இந்த நடைமுறையை அதிகம் பின்பற்றுவதில்லை என ‘மூப்படையும் மக்கள்தொகையும் மெதுவடையும் ஊழியரணி வளர்ச்சியும்’ என்ற ஆய்வு கூறுகிறது.
தேசியத் தொழிற்சங்க காங்கிரசும் (என்டியுசி) சாவ் அறக்கட்டளையும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.
சென்ற ஆண்டு (2023) ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 16 துறைகளைச் சேர்ந்த நிர்வாகிகள், ஆட்சேர்ப்பு மேலாளர்கள், மனிதவள மேலாளர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.
முதலாளிகளில் கால்வாசிப் பேர், பயிற்சியே ஆகச் சிறந்த மனிதவள உத்தி என்று கூறினர். நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை 17 விழுக்காட்டினரும் சுகாதாரம், உடல்நல ஆதரவை 14 விழுக்காட்டினரும் குறிப்பிட்டனர்.
முதிர்ச்சியடைந்த ஊழியர்களைத் தங்கள் நிறுவனங்களில் தக்கவைத்துக்கொள்ள நீக்குப்போக்கான வேலையிட ஏற்பாடுகளைக் கடைப்பிடிப்பதாக 48 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
அதையடுத்து சுகாதார, உடல்நல ஆதரவு, நிறுவனத்திற்குள்ளேயே வேலை மாற்றம், பணி மேம்பாட்டுக்கான தொடர் ஆதரவு, தலைமுறைகளுக்கு இடையிலான மதியுரைஞர் திட்டம் போன்றவை குறிப்பிடப்பட்டன.
ஆறாவது நிலையில், 28 விழுக்காட்டினர் மட்டுமே பயிற்சித் திட்டங்களைக் குறிப்பிட்டனர்.
அண்மைய ஆய்வின் முடிவுகள், பிப்ரவரி 5ஆம் தேதி நடந்த முதிர்ச்சியடைந்த ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கருத்தரங்கில் வெளியிடப்பட்டன.
தொழிற்சங்கத் தலைவர்கள், கல்விமான்கள், முதலாளிகள் என ஏறக்குறைய 120 பேர் அதில் கலந்துகொண்டனர்.
பயிற்சியின் முக்கியத்துவம் தொடர்பான புரிதலுக்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையிலான இடைவெளியை நிரப்ப வேண்டும் என்று ஆய்வு வலியுறுத்துகிறது.
திறன்மேம்பாட்டுப் பயிற்சிகளுக்குப் பிறகும் வயதான ஊழியர்கள் சிலர் வேலை தேடுவதில் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் பயிற்சிகள் மூலம் அடிப்படை அம்சங்களை மட்டுமே அவர்கள் அறிந்துகொள்வதாகவும் கூறப்பட்டது.