சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அதிபர் மன்றத்தின் புதிய உறுப்பினராக சிங்கப்பூரின் முஃப்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிபர் அலுவலகம் இன்று (பிப்ரவரி 1) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இதனை தெரிவித்தது.
முஃப்தியான டாக்டர் நசிருதீன் முகம்மது நசிருடன் சேர்த்து மன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 17 ஆகியிருக்கிறது.
அவரது மூன்று ஆண்டுகால நியமனம் அறிக்கை வெளியிடப்பட்ட அதே நாளில் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆக்ஸ்பர்ட் பல்கலைக் கழகத்தில் இறையியல் துறையில் டாக்டர் நசிருதீன் முனைவர் பட்டம் பெற்றவர். ‘முயிஸ்’ எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தில் பணியாற்றிய பிறகு 2020ல் அவர் சிங்கப்பூரின் முஃப்தியாக நியமிக்கப்பட்டார்.
சிங்கப்பூரின் முக்கிய இஸ்லாமியத் தலைவர்களில் ஒருவரான அவர், இன, சமய நல்லிணக்கம் குறித்து தேசிய வழிநடத்தும் குழுவிலும் சமய நல்லிணக்கத்துக்கான அதிபர் மன்றத்திலும் உறுப்பினராக உள்ளார்.
கொவிட்-19 தொற்றுநோய், முற்போக்கான இஸ்லாமிய சிந்தனை, நடைமுறைகளுக்கு ஆதரவளித்தல், சிங்கப்பூரின் சமய நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய சவால்களை எதிர்கொள்ள சிங்கப்பூர் முஸ்லிம் சமூகத்திற்கு வழிகாட்டுவதில் ஒரு முஃப்தியாக டாக்டர் நசிருதீன் முக்கிய பங்காற்றியுள்ளார்.
திரு நசிருதீன் தவிர, சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அதிபர் மன்றத்தில் சிங்கப்பூரின் ரோமன் கத்தோலிக்க பேராயரான ‘கார்டினல்’ வில்லியம் கோ, சீக்கிய ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவர் சுர்ஜித் சிங் ஆகியோர் உறுப்பினர்களாக மறுநியமனம் பெற்றுள்ளனர்.
இவர்களது நியமனம் ஏப்ரல் 1ஆம் தேதி நடப்புக்கு வரும். மூன்று ஆண்டுகள் அவர்கள் அப்பதவியில் நீடிப்பார்கள்.