அண்மையில் மின்னிலக்க நாணய (பிட்காயின்) முதலீட்டு மோசடியின் முகமாக மாறியுள்ள மற்றொரு பிரபலம் உள்ளூர்க் கலைஞர் ரெபேக்கா லிம்.
“ரெபேக்கா லிம் மிக முக்கியமான செய்தியைப் பகிர்கிறார்” என்ற விளம்பரம் ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்து மதிப்புமிக்க வட்டார செய்தித் தளத்தில் இடம்பெற்று வந்தது.
அந்த விளம்பரம், 8days.sg. என்ற பொழுதுபோக்குத் தளத்தில் இடம்பெற்ற விளம்பரக் கட்டுரையுடன் இணைக்க வேண்டும். ஆனால் அந்த இணைப்பு 37 வயதான லிம் பற்றிய ஒரு பொய்ச் செய்திக்கு இட்டுச் சென்றது.
செய்தி இணையத்தளமான சேனல் நியூஸ் ஏஷியாவைப் போன்று உள்ள அந்த இணையப்பக்கம், ‘பிட்காயின் ஃபியூச்சர்’ என்று கூறப்படும் தானியக்க மின்னிலக்க நாணய வர்த்தகத் திட்டத்துடன் இணைக்கிறது. அது நடிகையின் முதல் தர பணமீட்டும் திட்டம் என்று மோசடிக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில், பிரதமர் லீ சியன் லூங், தொழிலதிபர் பீட்டர் லிம், பாப் இசை பிரபலம் ஜே.ஜே. லின் போன்ற உள்ளூர் ஆளுமைகளின் அங்கீகரிக்கப்படாத படங்களையும் புனையப்பட்ட மேற்கோள்களையும் பயன்படுத்தும் பல மின்னிலக்க வர்த்தக மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
ரெபேக்கா லிம் பெயரிலான மின்னிலக்க நாணய மோசடி, தங்கள் தளங்களில் இடம்பெறும் மின்னிலக்க விளம்பரங்களைக் கண்காணிப்பது வெளியீட்டாளர்களுக்கு எவ்வளவு சவாலானது என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று இணையப் பாதுகாப்பு நிபுணர் திரு ஸ்காட் ஜார்கோஃப் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
பிரபல நிறுவனங்கள் இத்தகைய மோசடி விளம்பரங்கள் என்று தெரியாமலேயே தங்கள் பக்கங்களில் இடம்பெறச் செய்யலாம்,” என்று கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனத்தின் உத்திபூர்வ அச்சுறுத்தல் ஆலோசனைக் குழுவின் இயக்குநரான ஸ்காட் ஜார்கோஃப் கூறினார்.
எனினும், வாசகர்களைப் பாதுகாக்க மூன்றாம் தரப்பு விளம்பரக் கட்டமைப்புகளை ஆராய்ந்து, பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு வெளியீட்டாளர்களுக்கு உள்ளது என்றார் அவர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும், மின்னிலக்க முதலீடுகளை ஊக்குவிக்கும் 120க்கும் மேற்பட்ட மோசடி இணையத்தளங்களைத் தமது நிறுவனம் அடையாளம் கண்டதாக குரூப் ஐபி-யைச் சேர்ந்த திரு. கலுஜின் கூறினார்.
பயனாளரின் விவரங்களைத் திருட வகைசெய்வதாக இதில் பெரும்பாலானவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
மோசடிப் பக்கங்களைப் பார்வையிடுவது உடனடி அச்சுறுத்தலாக இருக்காது என்றாலும், அதில் தனிப்பட்ட விவரங்கள், கட்டணத் தரவுகளை விட்டுச்செல்வதை மக்கள் தவிர்ப்பது முக்கியம் என்று அவர் கூறினார்.
இணையத்தளம் உருவாக்கப்பட்ட தேதி குறித்தும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.