மோசடி வழியாகப் பெற்ற பணத்தை வெளிநாட்டிலுள்ள மின்னிலக்க நாணயப் பணப்பைகளுக்கு மாற்றியதன் தொடர்பில் 47 வயது தே பெங் கோக் மீது ஜனவரி 11ஆம் தேதியன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
ஸெங் மிங்கெ என்றும் அழைக்கப்படும் தே, தனது சிட்டிபேங்க் வங்கிக் கணக்கில் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 35,000 வெள்ளியையும் மார்ச் மாதத்தில் ரொக்கமாக 50,000 வெள்ளியையும் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தொகைகள் முழுவதும் அல்லது இவற்றின் ஒரு பகுதி, குற்றவியல் நடத்தைவழி சொந்த உபயோகத்துக்கு மற்றொருவர் பெற்ற பணம் என்று கூறப்படுகிறது.
இணையத்தின் மூலம் நடந்த ஒரு காதல் மோசடி தொடர்பில் 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் காவல்துறைக்குப் புகார்கள் கிடைத்ததாக ஜனவரி 10ஆம் தேதியன்று தெரிவிக்கப்பட்டது.
தே தன்னுடைய ‘பிஓஎஸ்பி’, ‘யுஓபி’, ‘சிட்டிபேங்க்’ வங்கிக் கணக்குகள் மூலம் பெற்ற பணத்தை, $320,000க்கும் மேல் மதிப்புடைய மின்னிலக்கப் பணமாக மாற்றி ‘லிஸி’ என்பவரின் பணப்பைகளுக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
இணையத்தில் ஆண்பெண் அறிமுகத்துக்காக இயங்கி வந்த தளம் ஒன்றின் மூலம் ‘லிஸி’ என்ற பெண்ணின் அறிமுகம் தேக்குக் கிடைத்ததாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
தே மீதான வழக்கு மீண்டும் பிப்ரவரி 15ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.