தைப்பூசத் திருவிழாவின் முந்தைய நாளான நேற்று, (ஜனவரி 24) காலை 5 மணியளவில் வெள்ளி ரதம் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலிலிருந்து புறப்பட்டு, சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சற்று நேரம் நின்று, பின்னர் கியோங் செய்க் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்தைச் சென்றடைந்தது.
பின்னர் வெள்ளி ரத ஊர்வலம் மீண்டும் ஜனவரி 24 மாலையில் ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்தில் தொடங்கியது.
கனத்த மழையின் காரணமாக வழக்கத்தைவிட ரதம் சற்று தாமதமாக மாலை ஆறு மணியளவில் புறப்பட்டது.
அங்கிருந்து ரதமேறிய முருகப்பெருமான், சிசில் ஸ்திரீட், ஹை ஸ்திரீட் வழியாக நகர்வலம் வந்து இரவு 9.20 மணிக்கு தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தை வந்தடைந்தார்.
விட்டுவிட்டுப் பெய்தபடியே இருந்த மழையையும் பொருட்படுத்தாமல் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
நிகழ்வில் ரத ஊர்வலத்தோடு, நகரத்தாரின் காவடி ஊர்வலமும் இடம்பெற்றது. காவடி ஏந்திய நகரத்தார் சவுத் பிரிட்ஜ் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்துக்குள் சென்று, ஆலயம் வலம் வந்து சிறிது நேரம் காவடியாட்டம் போட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வெள்ளி ரதம் செல்லும் பாதையில் இணைந்துகொண்டனர்.
சென்றாண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு அதிகமான அளவில் கிட்டத்தட்ட 160க்கும் மேற்பட்ட நகரத்தாரின் காவடிகள் வெள்ளி ரதத்துக்கு முன்னால் ஆடிக்கொண்டு சென்றன.