தீவிர சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு வெளிநாடுகளில் தாக்குதல்களை நடத்துவதில் ஆர்வமாக இருந்த உயர்நிலை 4ஆம் வகுப்பு மாணவருக்கு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 2023 நவம்பர் மாதம் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவர் ஒரு சீனர். இருந்தாலும் ‘வெள்ளை இனம்’ உயர்ந்தவர்கள் என்ற சித்தாந்ததால் ஈர்க்கப்பட்டு சுயமாக தீவிரவாதப்போக்குக்கு மாறினார்.
வெளிநாடுகளில் வெள்ளை இனத்தவர் அல்லாதவர் மீது அவர் தாக்குதல் நடத்த ஆர்வத்துடன் இருந்தார். ஆனால் சிங்கப்பூரில் எந்தவிதத் தாக்குதல்களையும் மேற்கொள்ள அவர் திட்டமிடவில்லை என்று உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு (ஐஎஸ்டி) ஜனவரி 24ஆம் தேதியன்று தெரிவித்தது.
இவர், தீவிர வலதுசாரி சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 2வது சிங்கப்பூரர் ஆவார்.
தற்போது 19 வயதாகும் முதல் இளையர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரியில் தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
பதினாறு வயது இளையருக்கு கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவர் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
வீட்டை மாற்றக் கூடாது, வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளக்கூடாது, இணையம் அல்லது சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக்கூடாது, உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் அனுமதியின்றி பொது அறிக்கைகளை வெளியிடக் கூடாது உள்ளிட்டவை நிபந்தனைகளில் சில.
“விசாரணையின்போது தன்னை ஓர் உயர்ந்த வெள்ளைக்காரர் என்றும் வெள்ளை இனத்தவர்களின் தீவிர ஆதரவாளர் என்றும் இளையர் காட்டிக்கொண்டார். வெள்ளையர்களுக்காக வெளிநாடுகளில் வன்முறையில் ஈடுபட வெள்ளை இனத்தவர்களின் தீவிர ஆதரவு குழுக்கள் தன்னை பணியில் அமர்த்தும் என்று அவர் எதிர்பார்த்தார்,” என்று ஐஎஸ்டி தெரிவித்தது.
அந்த இளையர் எப்படி தீவிரவாதப் போக்குக்கு மாறினார் என்பதை விளக்கிய ஐஎஸ்டி, வெளிநாட்டு வலதுசாரி அரசியல் விமர்சகரும் வெள்ளை இனத்தவர் மேன்மையானவர்கள் என்பதை வலியுறுத்துபவருமான பால் நிக்கலஸ் மில்லரின் காணொளிகளைப் பார்க்கும் வாய்ப்புகளைப் பெற்று அவர் மாறியதாக தெரிவித்தது.
2022ஆம் ஆண்டில் தீவிரவாதப்போக்குடைய வன்முறை காட்சிகளையும் அவர் இணையத்தில் பார்த்துள்ளார்.
‘பிரவுட் பாய்ஸ்’, ‘பூகாலூ மூவ்மெண்ட்’ போன்ற தீவிர வலதுசாரி சித்தாந்த அமைப்புகளுடன் தன்னை இணைத்துக்கொண்ட மில்லர், போரிட வேண்டும் என்று கூறி வருகிறார்.
ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், அரபுக்கள், ‘எல்ஜிபிடிகியூ’ எனக் குறிப்பிடப்படும் பெண் ஓரினக் காதலர்கள், ஆண் ஓரினக் காதலர்கள், கலப்பு இனக் காதலர்கள், 3ஆம் பாலினத்தவர் உள்ளிட்டவர்களை 2023ஆம் ஆண்டில் இளையர் வெறுக்கத் தொடங்கினார்.
அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க விழுக்காடு குற்றச்செயல்களுக்கு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்தான் காரணம் என்றும் கொடூரமான மரணத்துக்கு அவர்கள் தகுதியானர்கள் என்றும் அவர் நம்பியதாக ஐஎஸ்டி குறிப்பிட்டது.
மேற்கத்திய நாடுகளில் உள்ள வெள்ளை இன மக்களுக்கு எதிராக வன்முறைத் தாக்குதல்களில் சட்டவிரோத அரபுக் குடியேறிகள் ஈடுபட்டதாகவும் அவருக்குத் தோன்றியுள்ளது.
மேற்கத்திய நாடுகளில் பூர்விகமாகக் குடியிருக்கும் வெள்ளை இனத்தவர்களை அங்கு குடியேறும் வெள்ளையர் அல்லாதவர்கள் மாற்றி விடும் அபாயம் இருக்கிறது என்ற சித்தாந்தினாலும் இளையர் தீவிரமாக ஈர்க்கப்பட்டிருந்தார் என்று ஐஎஸ்டி தெரிவித்தது.