இளைர்களிடையே பிரபலமாக இருக்கும் ரோபிளாக்ஸ் என்ற இணைய விளையாட்டு, பார்ப்பதற்கு ‘மைன்ட்கிராப்ட்’ போன்ற சாதாரண விளையாட்டு போலத் தெரிந்தாலும் அங்கு தீவிர வலதுசாரிகள், ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கவனிப்பாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இளையர்கள் இணையத்தில் அதிக நேரம் செலவழிப்பதால் அவர்களில் சிலர் இத்தகைய வலதுசாரிகளின் தூண்டுதல்களுக்கு இலக்காகலாம் என்று பாதுகாப்பு கவனிப்பாளர்கள் கவலைப்படுகின்றனர்.
இணைய விளையாட்டுகளில் உள்ள வலதுசாரி நடவடிக்கைகள் பற்றி அறிவதாக உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்தது. இணையத்திலுள்ள தீவிரவாத கருத்துகளைக்கொண்ட தளங்களுக்கு இந்நாட்டில் தடை இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.
சிங்கப்பூரில வலதுசாரி தீவிரவாதம் வளர்ந்துவரும் மிரட்டலாக இருப்பதாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை கடந்த மாதம் வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டது. வலதுசாரி தீவிரவாதம் இன ஆதிக்கப்போக்கு, புலம்பெயர்தலுக்கு எதிர்ப்பு, இஸ்லாமிற்கு எதிர்ப்பு போன்ற கொள்கைகளைக் கொண்டுள்ளது. இந்த சித்தாந்தம் சில மேற்கத்திய நாடுகளில் மிக வேகமாக பெருகும் மிரட்டலாக இருப்பதாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை, ஆண்டுக்கு இருமுறை வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாண்டின் தொடக்கத்தில் இரண்டு பள்ளிவாசல்களின் மீது தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்த 16 வயது சிங்கப்பூர் மாணவரின் கைது, இத்தகைய மிரட்டல்களால் சிங்கப்பூரும்கூட பாதிக்கப்படலாம் என்பதைக் காட்டுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.