‘கார்ட்லைஃப்’ என்ற தனியார் தொப்புள்கொடி ரத்த சேமிப்பு வங்கியில் தொப்புள்கொடி ரத்த சேமிப்பு தொடர்பில் மேலும் குறைபாடுகளைக் கண்டறிந்துள்ளது சுகாதார அமைச்சு.
கார்ட்லைஃப் தனியார் தொப்புள்கொடி ரத்த வங்கி சிங்கப்பூர் பங்குப் பரிவர்த்தனையில் இடம்பெற்றுள்ள நிறுவனம். தொப்புள்கொடி ரத்தம் 150 டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்குள் வைத்திருப்பதுதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெப்ப அளவு. இந்நிலையில, அங்கு அந்த வெப்ப நிலையைத் தாண்டி தொப்புள்கொடி ரத்தம் சேமித்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை நடத்தியதில் இது தெரியவந்ததாக நவம்பர் 30ல் அமைச்சு கூறியது. இதனால் 2,200 தொப்புள்கொடி ரத்த சேமிப்புகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) தேதியிட்ட ஆவணப் பதிவில், கார்ட்லைஃப் சுகாதார விதிமுறைகளை மீறி இருக்கக்கூடிய செயல்கள் குறித்து அமைச்சு தான் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்து தனக்கு தெரிவித்ததாக கார்ட்லைஃப் கூறியது.
சம்பவம் குறித்து சரிவரத் தெரிவிக்கும் முறை இல்லாதது, போதிய பயிற்சி பெற்ற தகுதியுடைய ஊழியர்கள் இல்லாதது, முறையற்ற வகையில் தொப்புள்கொடி ரத்தம் சேமித்து வைக்கப்பட்டு இருந்தது ஆகியன அவற்றில் சில என்று கார்ட்லைஃப் கூறியது.
தொப்புள்கொடி ரத்த சேமிப்பில் கடைப்பிடிக்க வேண்டிய வெப்ப நிலை பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, நவம்பர் 30ஆம் தேதி மேலும் மூன்று குறைபாடுகளை தான் கண்டதாக அமைச்சு விளக்கியது.
அவை யாவன:
2022ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை ரத்த சேமிப்புப் பகுதியின் வெப்பநிலை மாற்றம் பற்றி நிறுவன ஊழியர்களுக்கு தெரிவிக்க தவறியது.
இரண்டு ரத்த சேமிப்புத் தொட்டிகளில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாதது.
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமல்படுத்தப்பட்ட புதிய தொப்புள்கொடி ரத்த பதப்படுத்தும் முறை திட்டப்படி முறைப்படுததப்படவில்லை.
“இதுபோன்ற விதிமீறல்கள் சரிசெய்யப்படுவதுடன் அந்த விதிமீறல்கள் ஏற்பட்ட சூழ்நிலைகளை தவிர்ப்பது ஆகியவற்றை மே 31ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது,” என்று கார்ட்லைஃப் தெரிவித்தது.