தொப்புள்கொடி ரத்தம் சேமித்து வைக்கும் நிறுவனமான கார்ட்லைஃப் நிர்வாகத்திற்கு சேமிப்புத் தொட்டி ஒன்றின் வெப்பநிலை, 2022 ஜூனில் சில நாள்கள் ஒழுங்கற்று இருந்தது குறித்துத் தெரியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் பங்குச்சந்தையில் பட்டியலிப்பட்டுள்ள அந்நிறுவனம், எஸ்ஜிஎக்ஸ்-எஸ்டி கேட்ட கேள்விக்கு விளக்கமளித்திருந்தது.
“வெப்பநிலை மாறுபட்டிருப்பது குறித்து ஊழியர் ஒருவர் நிர்வாகக் குழுவில் உள்ள சில உறுப்பினர்களை எச்சரித்தார். உடனே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்விசாரணை நடத்தியது. இதையடுத்து நிர்வாக உறுப்பினர்கள் நிறுவனத்தின் சோதனைக் கூடத்தின் நடைமுறைகளையும் ஊழியர் பயிற்சி முறைகளையும் வலுப்படுத்தினர்,” என்று கார்ட்லைஃப் குறிப்பிட்டது.
அச்சம்பவம் குறித்து கடந்த பிப்ரவரியில் நிர்வாக சபையிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்படும் நிதித் தாக்கம் குறித்து மதிப்பிட்டப்பட்டது. அது மட்டுமல்லாமல் 2022, 2023 நிதியாண்டின் செயல்பாட்டில் தாக்கம் இருக்காது என்ற கண்ணோட்டத்தில் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்று அது மேலும் கூறியது
தொப்புள்கொடி சேமிப்புக் கலன்கள் ஏழின் வெப்பநிலை உகந்தநிலையில் இல்லாததால் கார்ட்லைஃப் நிறுவனம் விசாரிக்கப்படுவதாக கடந்த நவம்பர் 30ஆம் தேதி சுகாதார அமைச்சு தெரிவித்தது.
உகந்த வெப்பநிலையில் பராமரிக்கப்படாததால் 2,200 யூனிட் தொப்புள்கொடி ரத்தம் பாழானது.