2020ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் இளையர்களின் மனநலம் மேம்பட்டு வந்துள்ளது. ஆனால் இன்னமும் கொவிட்-19 தொற்றுநோய் தாக்கத்திலிருந்து அவர்கள் முழுமையாக மீளவில்லை.
தொற்றுநோய் காலத்தில் பட்டம் பெற்றவர்கள், பட்டம் பெறாதவர்கள் இடையே வாழ்க்கையில் இருந்த திருப்தியில் ஏற்றத் தாழ்வு இருந்தது. பட்டம் பெற்றவர்கள் அதிக திருப்தியுடன் இருந்தனர்.
கொள்ளைநோய்க்கு முன்பு இரு தரப்பினருக்கு இடையே வாழ்க்கைத் திருப்தியில் சிறிதளவே வித்தியாசம் இருந்தது.
ஜனவரி 22ஆம் தேதி வெளியிடப்பட்ட இரண்டு ஆய்வுகளின் முடிவுகள் இதனைத் தெரிவிக்கின்றன.
தேசிய இளையர் ஆய்வின் தரவுகளின்படி 2022ஆம் ஆண்டில் ஆய்வில் பங்கேற்றவர்களில் 40 விழுக்காட்டினர் தங்களுடைய மனநலம் நன்றாக அல்லது மிக நன்றாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். இது 2020ஆம் ஆண்டில் 35 விழுக்காடாக இருந்தது.
தொற்றுநோய்க்கு முந்திய காலக்கட்டத்தில் அதாவது 2019ல், 52 விழுக்காட்டினர் மனநலம் நன்றாக இருந்ததாகத் தெரிவித்திருந்தனர்.
தேசிய இளையர் மன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, சிங்கப்பூரில் 15 வயது 34 வயது வரை உள்ள பள்ளிப் பருவ பதின்ம வயது முதல் இளையர் வரையிலானவர்களின் முக்கிய கவலைகள், பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டது.
தேசிய அளவில் மற்றோர் ஆய்வு நடத்தப்பட்டது. 2017 முதல் 2022 வரை 1993க்கும் 2000க்கும் இடையே பிறந்த 4,000 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
‘த யூத் ஸ்டெப்ஸ்’ எனும் அந்த ஆய்வை தேசிய இளையர் மன்றம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் உள்ள கொள்கை ஆய்வுக் கழகத்தின் ‘சோஷியல் லேப்’ ஆகியவை இணைந்து மேற்கொண்டன.
இதில் தொற்றுநோய்க்கு முந்தைய காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் தொற்றுநோய் காலத்தில் பட்டம் பெற்றவர்களும் வேலை தேடியவர்களும் குறைவான வாழ்க்கைத் திருப்தியுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துரையாடலும் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற பார்வையாளர் ஒருவர், ஊழியர் அணிக்கு மாறும் இளையர்களுக்கு நிறுவனங்கள் சிறந்த வகையில் உதவ முடியுமா என்று கேட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த தேசிய இளையர் மன்றத்தின் துணைத் தலைமை நிர்வாகி டான் லின் டெக், இளையர்களின் கவலைகளில் அக்கறை காட்ட நிறுவனங்களுக்கும் பங்குண்டு என்று குறிப்பிட்டார்.
“வேலைக்கான நேர்காணலின்போது பொதுவாக திறன்களை மேம்படுத்த ஊழியர்களுக்கு எத்தகைய பயிற்சிகள் வழங்கப்படும் என்று வேலை தேடுவோர் கேட்பது வழக்கம். ஆனால் தற்போது மனநலத்திற்கு ஆதரவான எத்தகைய நடவடிக்கைகள் இருக்கின்றன என்று கேட்கப்படுகிறது,” என்று தமது கடந்த கால அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.
“இளையர்களின் மனநலத்திற்கு வலுவான ஆதரவுத் திட்டங்களை நிறுவனங்கள் கொண்டிருப்பது போட்டித் திறன்மிக்க அனுகூலங்களை வழங்கும்,” என்று திரு டான் லின் டெக் கூறினார்.