எஸ்எம்ஆர்டி பேருந்துச் சேவையின் இயங்குமுறையை மேம்படுத்த சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழக (எஸ்ஐடி) மாணவர்கள் உதவியுள்ளனர்.
எஸ்எம்ஆர்டி, எஸ்ஐடி இடையிலான ஒத்துழைப்பு மூலம் இது சாத்தியமானது.
பேருந்துச் சேவை 979ன் ஓட்டுநர்களுடைய வேலை நேர அட்டவணை தயாரிப்புப் பணிகளை எஸ்ஐடி மாணவர் ஒருவர் மேம்படுத்தியுள்ளார்.
பொதுவாக இப்பணியை முடிப்பதற்கு அரை நாள் தேவைப்படும். ஆனால் மாணவர் வடிவமைத்த தானியங்கி முறையைப் பயன்படுத்தி அதை இனி மிக விரைவாக, எளிதாக முடித்துவிடலாம்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், தமது இறுதி ஆண்டு ஒப்படைப்புத் திட்டத்துக்காக 25 வயது திரு கிலிஃபர்ட் சோங், கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டார்.
பேருந்து ஓட்டுநர்களின் வேலை நேர அட்டவணையை மேம்படுத்த அவர் உதவினார்.
திரு சோங் வடிவமைத்த தானியங்கி முறை பேருந்துச் சேவை எண் 979 ஓட்டுநர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை மேலும் மேம்படுத்தப்பட்டு கூடுதல் பேருந்து ஓட்டுநர்களுக்குப் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்எம்ஆர்டிக்கும் எஸ்ஐடி மாணவர்களுக்கும் இடையே மூன்று ஒத்துழைத்துத் திட்டங்கள் நிறைவடைந்துவிட்டன. அவற்றில் திரு சோங்கின் திட்டமும் ஒன்று.
புள்ளிவிவரப் பகுப்பாய்வின் மூலம் பேருந்துகளின் பராமரிப்பை மேம்படுத்துவது, விபத்துக்குள்ளாகக்கூடிய ஓட்டுநர்களை அடையாளம் காணும் முறையை மேம்படுத்துவது ஆகியவை ஏனைய இரண்டு திட்டங்களாகும்.
சிங்கப்பூரின் போக்குவரத்துத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ஆய்வு மற்றும் மேம்பாட்டை வலுப்படுத்த எஸ்ஐடியும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் சேர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இதுவரை, திரு சோங் உட்பட 48 எஸ்ஐடி பட்டதாரிகளை எஸ்எம்ஆர்டி நிறுவனம் வேலையில் அமர்த்தியுள்ளது.