குறைந்த வருமானக் குடும்பங்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்கள் எளிதில் நன்கொடை வழங்கலாம். இதற்காக எட்டு எம்ஆர்டி நிலையங்களிலும் இரண்டு பேருந்து நிலையங்களிலும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 2023 டிசம்பர் 11 முதல் 2024 ஜனவரி 31 வரை இந்த வசதி இருக்கும்.
அதிபர் சவால்கீழ் எஸ்எம்ஆர்டியின் ‘Tap for Hope’ என்ற முயற்சி மூலம் திரட்டப்படும் நிதியால் 86 அறப்பணி அமைப்புகள் பயனடையும்.
ரட்சண்ய சேனை, மஞ்சள் நாடா, சிங்கப்பூர் சிறார் சங்கம் உள்ளிட்டவை இதில் பயனடையவிருக்கின்றன.
டிசம்பர் 11ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டி இந்த விவரங்களைத் தெரிவித்தது.
தேசிய சமூக சேவை மன்றத்தின் ஆதரவுடன் நிதித் திரட்டும் எஸ்எம்ஆர்டி, பேஃபிரண்ட், ஹார்பர்ஃபிரண்ட், பாய லேபார், சிராங்கூன், புகிஸ், தஞ்சோங் பகார், தோ பாயோ, ராஃபிள்ஸ் பிளேஸ் எம்ஆர்டி நிலையங்களிலும் சூவா சு காங், உட்லண்ட்ஸ் ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து நிலையங்களிலும் நன்கொடையளிப்பதற்கான சாதனங்கள் வைக்கப்பட்டிருக்கும்.
பயணிகள் $2, $6 அல்லது $8 நன்கொடை வழங்கலாம். ஈஸிலிங்க் அட்டைகள், விசா, மாஸ்டர், ஆப்பிள் பே, சாம்சங் பே, அலிபே+ போன்றவற்றின் மூலம் நன்கொடைகளை வழங்க முடியும்.
‘அதிபர் சவால்’ என்பது அறப்பணி அமைப்புகளுக்கு நிதி திரட்டும் தேசிய இயக்கமாகும். வசதியற்றவர்களுக்கு உதவ 2000ஆம் ஆண்டில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.
எஸ்எம்ஆர்டியின் ‘Tap for Hope’ நிதித் திரட்டு நிகழ்ச்சி டிசம்பர் 11ஆம் தேதி பேஃபிரண்ட் எம்ஆர்டி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.