புக்கிட் தீமா கால்வாயில் நியூட்டன் வட்டாரத்திற்கு அருகே, ஜனவரி 17ஆம் தேதி, தண்ணீர் நீல நிறமாகக் காட்சியளித்தது குறித்து பொதுப் பயனீட்டுக் கழகம் விசாரித்து வருகிறது.
கெங் லீ ரோட்டிற்கும் கம்போங் ஜாவா ரோட்டிற்கும் இடைப்பட்ட புக்கிட் தீமா கால்வாயின் ஒரு பகுதியில் கழக அதிகாரிகள் சோதனை நடத்தியதில் வழக்கத்துக்கு மாறான பொருள்கள் ஏதும் கால்வாய் நீரில் கலந்ததாகக் கண்டறியப்படவில்லை.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்குப் பதிலளிக்கையில் கழகம் அவ்வாறு கூறியது.
கால்வாயில் அந்தப் பகுதிக்குப் பிறகோ மரினா நீர்த்தேக்கத்திலோ தண்ணீரின் தரம் பாதிக்கப்படவில்லை என்று கழகம் குறிப்பிட்டது.
கால்வாய் நீர் நீல நிறமாகக் காட்சியளித்தது குறித்த காணொளி சமூக ஊடகமான டிக்டாக்கில் பரவியது. திரு மெல்வின் லீ என்பவர் பதிவிட்ட அந்தக் காணொளி 56,000க்கு மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது.
அந்த வட்டாரத்தில் கிட்டத்தட்ட எல்லா நாள்களிலும் வேலை பார்க்கும் தனக்கு, கால்வாயின் நிறமாற்றம் அதிர்ச்சியளித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அவர் கூறினார்.
சுய தொழில் புரியும் அந்த 34 வயது ஆடவர், “முதலில் ஏதோ பண்டிகை அல்லது நிகழ்ச்சி தொடர்பில் வண்ணம் கலக்கப்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன். நிறம் மாறியிருந்தாலும் அந்தத் தண்ணீரில் துர்நாற்றம் வீசவில்லை,” என்றார்.
இச்சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகக் குறிப்பிட்ட பொதுப் பயனீட்டுக் கழகம், அந்த வட்டாரத்துக்கு அருகே வேலை மேற்கொண்டுள்ள கட்டுமான நிறுவனங்கள், குத்தகையாளர்களுக்கு சட்டவிரோதமாக பொருள்களை பொது வடிகால்களில் கொட்டக்கூடாது என்று நினைவூட்டியதாகக் கூறியது.
ஜனவரி 18ஆம் தேதி, புக்கிட் தீமா கால்வாயின் அந்தப் பகுதியில் தண்ணீரின் நிறம் வழக்க நிலைக்குத் திரும்பியதாகக் கூறப்பட்டது.
முன்னதாக, சென்ற ஆகஸ்ட் மாதம் தோ பாயோவில் ஒரு கால்வாயிலும் தண்ணீர் நீல நிறத்தில் காணப்பட்டது. 2015ஆம் ஆண்டு ஜூரோங் வெஸ்ட்டில் ஒரு கால்வாயில் தண்ணீர் சிவப்பு நிறத்தில் காணப்பட்டது.
சிங்கப்பூர் நீர் நிலைகள் மாசடைந்ததாகச் சந்தேகம் எழுந்தால் பொதுமக்கள் அதுகுறித்து 1800-2255-782 என்ற தொலைபேசி எண்ணில் பொதுப் பயனீட்டுக் கழகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.